[கிளவியாக்கம்]சொல்லதிகாரம் தெய்வச்சிலையார்5

5

அஃறிணைச் சொற் பாகுபடுமாறு உணர்த்துதல் நுதலிற்று.

இ - ள்.ஒன்றனையறியுஞ் சொல்லும், பலவற்றை யறியுஞ் சொல்லுமென அவ்விருகூற்றுச்சொல், அஃறிணையிடத்த, எ - று.

அஃறிணைப் பொருண்மை, உயிர்ப்பொருள் உயிரில் பொருளெனவும்; உயிர்ப்பொருட்கண், ஆண், பெண் எனவும்; அவை யெல்லாம் பொருள் தொறும் ஒருமையும் பன்மையுமாகியும் பலவகைப்படுமாலெனின், அவையெல்லாம் ஒருமையாயின், வந்தது எனவும், பன்மையாயின், வந்தன எனவும் வழங்கப்படுதலிற் சொன்முடிபு நோக்கிக் கூறினாரென்க. அஃறிணைப் பொருள்பற்றிவரும் பெயர்ச் சொல்லும், வினைச்சொல்லும் இருபகுதியவாமென்றே கொள்ளப்படும்.

(3)

பேடியும் தெய்வமும் உயர்திணையில் அடங்குதல்

4.பெண்மை சுட்டிய உயர்திணை மருங்கின்
ஆண்மை திரிந்த பெயர்நிலைக் கிளவியும்
தெய்வஞ் சுட்டிய பெயர்நிலைக் கிளவியும்
இவ்வென வறியு மந்தந்தமக் கிலவே
உயர்திணை மருங்கிற் பால்பிரிந் திசைக்கும்.

எஞ்சியது உணர்த்துதல் நுதலிற்று

இ - ள். பெண்மை சுட்டிய உயர்திணை மருங்கின் என்பது: பெண்மையைக் குறித்த உயர்திணைப் பெண் பிறப்பினுள். எ-று. ஆண்மை திரிந்த பெயர்நிலைக் கிளவியும் என்பது, ஆண்மைத் தன்மையிற் றிரிந்த பெயர்க்கண் நிற்குஞ் சொல்லும். எ - று. தெய்வஞ் சுட்டிய பெயர்நிலைக் கிளவியும் என்பது தெய்வப் பொருண்மையைச் சுட்டிய பெயர்க்கண் நிற்குஞ் சொல்லும். எ - று. இவ்வென அறியும் அந்தம் தமக்கிலவே என்பது, இவையென அறிய நிற்கும் ஈற்றெழுத்தினைத் தமக்கென இல. எ - று. உயர்திணை மருங்கிற் பால் பிரிந்திசைக்கும் என்பது, உயர்திணை மருங்கிற் பாலாகிப் பிரிந்திசைக்கும். எ - று.

ஆண்மை திரிந்த பெயராவது பேடி, அச்சத்தி னாண்மையிற் றிரிந்தாரைப் பேடியென்ப வாகலான். ஈண்டு அப்பெயர் பெற்றது அலியென்று கொள்க. அலி மூவகைப்படும். ஆணுறுப்பிற் குறைவின்றி ஆண் உடன்மையிழந்ததூஉம், பெண்ணுறுப்பிற் குறைவின்றிப் பெண்டன்மை யிழந்ததூஉம், பெண்பிறப்பிற் றோன்றிப் பெண்ணுறுப்பின்றித் தாடி தோற்றி ஆண்போலத் திரிவதூஉமென. அவற்றுட் பிற் கூறியது ஈண்டுப் பேடி யெனப்பட்டது. அதன்கண் நிற்குஞ் சொல்லாவது வினைச்சொல்.

இப் பேடி யென்னுஞ் சொல்லோடு தொடரும் வினைச்சொல்லும், தெய்வப் பொருண்மை குறித்த பெயரோடு தொடரும் வினைச்சொல்லும், உயர்திணை யாண்பாலறி சொல்லானும், பலரறி சொல்லானும் ஒலிக்கும் என்றவாறாயிற்று.