பல பொருள் ஒரு சொல் இருவகைப் படும் எனல் 50. | வினைவேறு படூஉம் பலபொருள் ஒருசொல் வினைவேறு படாஅப் பலபொருள் ஒருசொலென் றாயிரு வகைய பலபொருள் ஒருசொல். |
பல பொரு ளொருசொற் பாகுபடுமாறு உணர்த்துதல் நுதலிற்று. இ - ள். பலபொருளுணரவருஞ் சொல்லாவன பலபொருட்கும் தனித்தனிப் பெயராகி வருவதூஉம் பலபொருளொரு சொல்லாம்: பலபொருட்கும் பொதுப்பெயராகி வருவதூஉம் பலபொருளொரு சொல்லாம், அவற்றுள் வினைவேறுபடூஉம் பலபொருளொரு சொல்லாவன; மா, வேங்கை எனவும், மக்கள், பெற்றம் எனவும் வருவன, வினைவேறுபடா அப் பலபொருளொரு சொல்லாவன: சேவல், பெடை யென்பன. அவற்றுக்கு உதாரணம் வருகின்ற சூத்திரத்தாற் காட்டுதும். (50) வினை வேறு படூஉம் பலபொருள் ஒரு சொல் 51. | அவற்றுள், வினைவேறு படூஉம் பலபொரு ளொருசொல் வேறுபடு வினையினும் இனத்தினுஞ் சார்பினும் தேறத் தோன்றும் பொருள்தெரி நிலையே. |
வினைவேறுபடும் பலபொருளொரு சொல் பொருளுணர்த்துமாறு உணர்த்துதல் நுதலிற்று. இ - ள். மேற் கூறப்பட்டவற்றுள் வினைவேறுபடும் பல பொருளொருசொல்பொருள் தெரியுங்காலத்து வேறுபட்ட வினையினானும், இனத்தினானும், சார்பினானும் தெளியத்தோன்றும், எ-று. எ - டு. மா காய்த்தது, வேங்கை பூத்தது என்றவழி மரம் என்பது அறியப்பட்டது. மா ஓடிற்று; வேங்கை பாய்ந்தது என்றவழி விலங்கு என்பது அறியப்பட்டது. இவை தனித்தனிப் பொருள் உணர்த்தின. இவ்வூர் மக்களெல்லாம் போர்க்குப் போயினார் என்றவழி ஆண்பால் உணரப்பட்டது. இவ்வூர் மக்களெல்லாம் தைந்நீராடினார் என்றவழிப் பெண்பால் உணரப்பட்டது. இவ்வூர்ப் பெற்றமெல்லாம் அறம் கறக்கும் என்றவழிப் பெண்பால் உணரப்பட்டது. இவ்வூர்ப் பெற்றமெல்லாம் உழவு ஒழிந்தன என்றவழி ஆண்பால் உணரப்பட்டது. இவை பொதுப்பொருள் உணர்த்தின. இவை வினையினாற் பொருள் விளக்கின.
|