சான்றோர் செய்யுளினும் வரூஉம் வேற்றுமை மயக்கம் எல்லாம் இதுவே ஓத்தாகப் பொருள் உரைத்துக் கொள்க என்றவாறாயிற்று. எ - டு. ‘நோயின் நீங்கினான்’ என்பது ‘நோயை நீங்கினான்’ எனவும், ‘சாத்தனை வெகுண்டான்’ என்பது ‘சாத்தனொடு வெகுண்டான்’ எனவும் ஆம். இத்துணையும் ஒரு வேற்றுமைக்குரிய பொருளே ஏனை வேற்றுமைக் கண்ணும் மயங்குமாறு கூறப்பட்டது. (17) உருபு தொடர்ந்து அடுக்கிய வழிப்படுவதோர் இலக்கணம் 99. | உருபுதொடர்ந் தடுக்கிய வேற்றுமைக் கிளவி ஒருசொன்னடைய பொருள்சென் மருங்கே. |
ஓர் உருபு பல தொடர்ந்தடுக்கியவழி வரும் இலக்கணம் உணர்த்துதல் நுதலிற்று. ஒரு சொல் பல அடுக்கி வரும் வழி--பெயரடுக்கு, வேற்றுமையடுக்கு, முற்றுச்சொல் லடுக்கு, பெயரெச்ச அடுக்கு, வினையெச்ச அடுக்கு, இடைச்சொல்லடுக்கு, உரிச்சொல்லடுக்கு எனப் பலவகைப்படும். அவற்றுள், வேற்றுமை யடுக்காவது-ஓருருபு அடுக்கி வருதலும், பல உருபு அடுக்கி வருதலும் என இருவகைப்படும். அவற்றுள் ஓருருபு அடுக்கி வருதல்--ஒரு பொருண்மேல் அடுக்கி வருதலும், பல பொருண்மேல் அடுக்கி வருதலும் என இருவகைப்படும். அவ்விருவகையும் இச்சூத்திரத்தாற் கூறப்படும். இ - ள். உருபு தொடர்ந் தடுக்கிய வேற்றுமைச் சொல் ஒரு சொல் நடையவாம், முடிக்கும் பொருண்மை செல்வுழி எ-று. ஓர் உருபு ஒரு வினையான் முடியாது, பல உருபு ஒரு வினையான் முடியும் என்றதனான் வழுவமைதி கூறியவாறாம். “தேம்பைந்தார் மாறனைத் தென்னர் பெருமானை வேந்தனை வேந்தர்மண் கொண்டானை--யாஞ்சிறிதும் எங்கோல் வளைகவர்ந்தான் என்னலும் ஆகுமோ! செங்கோல் சிறுமை யுற.” இதனுள் ஐகார உருபு பல அடுக்கி, ஒரு பொருட்கண் வந்து, வளைகவர்ந்தான் என்னலும் ஆகுமோ என்பதனோடு முடிந்தவாறு கண்டுகொள்க.. “கொல்லிப் பொருப்பனாற் கொங்கர் பெருமானால் வில்லிற் பகைகடிந்த வேந்தனால்--அல்லியந்தார்க் கோதையால் வையங் குளிர்தூங்க என்கொலோ! பேதையார் எய்துவது பேது.”
|