பிற என்றதனான் காது, புருவம் முதலாய பன்மை உறுப்புக்கள் யாவும் கொள்க. "கடப்பாடிலவே" என்றதனான் சிறுபான்மை கண்நல்ல, தோள்வலிய. "அவன் கோலினும் தண்ணிய தட மென்றோளே" எனப்பன்மை வினைக்கண்ணும் ஒருமைச் சொல்லாகவருதலும் கொள்க. 'தம்வினைக்கியலும் எழுத்தலங்கடையே' என்றதனான் தம் முதல்வினைக்குரிய எழுத்தான் நடக்குமிடத்து முதல் ஒன்றாயின் ஒருமையாகவும் முதல் பலவாயின் பன்மையாகவும் முடியும் என்று கூறி உரையாசிரியன்மார் கண் நல்லன், தோள் நல்லள், கண் நல்லர், தோள் நல்லர் என எடுத்துக் காட்டுவார். அவர்கூறும் நல்லன், நல்லர் என்பவை இவன், இவள், இவர் என மறைந்து நிற்கும் எழுவாய்க்குரிய முடிபாதல் அன்றிச் சினைக்குரிய முடிபாகாமை அறிக. பன்மைச் சினை நிலைக்கிளவிகள் எழுவாயாய வழிமுடியும் முடிபுபற்றிய ஆராய்ச்சியே இச்சூத்திரத்தாற் பேசப்படுதலின் அவ்வுரை பொருந்தாமை புலப்படும். |
கிளவியாக்கத்துள் பாலறி கிளவிகளும், தம்மரபினவாக வருப வைகளும், செப்பாகவும் வினாவாகவும் தம்முள் தொடருங்கால் அவை மயங்கல் கூடாஎனத் தொடராக்க மரபுகளைப் பற்றிக் கூறிய அத்தொடர்களுள் வரும் சொற்கள் அல்வழியாகவும் வேற்றுமை வழியாகவும் புணருமாதலின் அவை தொகையாகவும் தொடராகவும் வேற்றுமைப் பொருள்படப் புணர்ந்து தொடருங்கால் அவற்றை வேறுபடுத்திக் காட்டும் உருபுகள் ஆறு என்பதும், அவை விரிந்தும் மறைந்தும் புணர்ந்து வரும் தொடர்கள் வேற்றுமைத்தொடர்களாகும் என்பதும், வேற்றுமை உருபுகளான் வேறுபடாத தொடர்களெல்லாம் அல்வழித்தொடர்களாகும் என்பதும் எழுத்ததிகாரத்துப் புலப்படுத்தினார். (சூ - 113) |