எ-டு :நம்பி-சாத்தன்-மக்கள்-நிலம் எனவரும். இவை பெயர் தோன்றிய நிலையாய் நிற்றலாம். நம்பி வந்தான், சாத்தன் நல்லன், மக்கள் வாழ்வார், நிலம் வலிது இவை பயனிலை கொண்டு நிற்றல். நம்பியைக் கண்டேன், சாத்தனைப் பார்த்தான் இவை வடிவு திரிந்து நிற்றல். நம்பியை, நம்பியொடு, நம்பிக்கு, நம்பியின், நம்பியது, நம்பிகண், நம்பீ எனப்பிற உருபுகளொடும் கூட்டிக் கண்டு கொள்க. எழுவாய் எனினும் வினை முதல் எனினும் பெயர் வேற்றுமை எனினும் முதல் வேற்றுமை எனினும் ஒக்கும். | வினை முதல் என்பது ஒரு தொழிலை நிகழ்த்தும் கருத்தாவையும் அத்தொழில் நிகழ்தற்குச் சார்பாக அமையும் பொருள்களையும் சுட்டும் இலக்கணக் குறியீடாகும். எழுவாய் என்னும் பெயர் வேற்றுமை, அறுவகைப் பயனிலைகளைக் கொண்டு முடியுங்கால் கருத்தாவாகவும் ஐ முதலிய உருபுகளை ஏற்றுச் செயப்படுபொருள் முதலியவாக வேறுபடுங்கால் சார்புப்பொருளாகவும் அமைந்துநிற்கும். அஃதாவது சாத்தன் நூலைக் கற்றான் என்புழிச் சாத்தன் கற்றல் தொழிலை நிகழ்த்தும் வினைமுதல், அவ்வினை நூலின்றி நிகழ்தற்கு ஆகாமையின் நூல்சார்புவினைமுதல். இவ்வாறே கருவி முதலியவை சார்புவினை முதலாதலை ஓர்ந்துகொள்க. | இச்சூத்திரத்திற்கு இவ்வாறு பொருள் கோடலே ஆசிரியர் கருத்தென்பதை அவர் பிறவேற்றுமைகளின் இலக்கணங்கூறுங்கால் "இரண்டாகுவதே ஐயெனப் பெயரிய" என்றும் "அவ்விரு முதலிற்றோன்றும்" என்றும் எண்ணுப் பெயரையும் உருபுப் பெயரையும் அதன் வேற்றுமை நிலையையும் ஒருங்கு கூறுமாற்றான் அறிக. இச்சூத்திரத்துள் எழுவாய் என்பது எண் குறித்து நின்றது. பெயர் என்பது உருபு குறித்து நின்றது. தோன்றும் நிலை என்பது அதன் வேற்றுமை நிலை குறித்து நின்றது. பொருட்பெயர் முதலாய எல்லாப் பெயர்களும் எழுவாயாக வரும். வினைச்சொல் வாராது. அவை, சாத்தன் வந்தான், வேனில் பிறந்தது, கண் பெரிது, கருமை பரவிற்று, ஈதல் புகழ் தரும், அவன் வந்தான் எனவரும். | இம் முதல்வேற்றுமையாகிய பெயர் பிறவேற்றுமைப் பொருளை ஏற்று வடிவுதிரியாமல் நிற்றலும் உண்டு. | எ-டு :சோறு குழைந்தது எனவரும். சோறு தானே குழையாதாகலின் செயப்படுபொருள் எழுவாயின் தன்மைத்தாய் நின்றது. இதன் அகநிலைத் தொடர் நங்கை சோற்றைக் குழைத்தாள். நங்கையான் சோறு குழைக்கப்பட்டது என்பனவாதலைக் கண்டு |
|
|