பெயர்க்கும் ஒத்தலின் அப்பெயர் வெளிப்படையாகச் செம்பொருள்தரின் அதனை ஆக்கப்பெயர் என்றும், யாதானும் ஓரியைபான் குறிப்புப் பொருள்தரின் அதனை ஆகுபெயர் என்றும் இலக்கண நூலோர் வகுத்தமைத்தனர். |
அஃதாவது, தெங்கு என்னும் ஒருபெயர் தெங்குவளர்ந்தது - தெங்கு முற்றிற்று என வருங்கால், வளர்ந்தது என்னும் பயனிலையான் தெங்கு என்பது மரத்தினையும், முற்றிற்று என்னும் பயனிலையான் தெங்கினது காயினையும் உணர்த்தி நின்றது. மேலும் இவ்வாறே தெங்கு என்னும் பெயர் தெங்கு வளர்த்தான், தெங்கு உத்தரமிட்டான், தெங்குதின்றான், தெங்கு கறிசமைத்தான், தெங்கின்பால் பிழிந்தான் என ஏனை வேற்றுமைப் பொருட்கண்வரினும் ஆக்கப் பெயராகவும் - ஆகு பெயராகவும் நிற்பதைக் காணலாம். |
பெயர்ப்பொருளை வேற்றுமைப்படுத்துவது வினைகளே யாதலின் அவ்வினைகளே ஆக்கப் பெயர்களை ஆகுபெயர்களாக வேறுபடுத்தும் என்க. |
செயப்படுபொருள் முதலிய வேற்றுமை உருபுகள் தம் பொருளிற்றீர்ந்தும், தீராமலும் பிறவேற்றுமையொடு மயங்குதல் போல ஆக்கப் பெயர்களும் தம்பொருளிற்றீர்ந்தும் - தீராமலும் ஆகுபெயராய் வந்து மயங்குதலின், இதனை இவ்வியலுள்வைத்தோதுகின்றார் ஆசிரியர். எனவே, ஆகுபெயர் எழுவாய் வேற்றுமை மயக்கம் என்பதுதெளிவாம். |
எழுவாய் வேற்றுமையாய் நிற்குமோர் ஆக்கப்பெயர், தன் இயற்பொருளுணர்த்தாமல் தன்னொடு தொடர்புடைய பிறிதொரு பொருளுக்கு ஆகி அப்பொருள் உணர்த்துங்கால் அஃது எழுவாயாகிய பெயரின் மயக்கமே என்பதை ஓர்ந்து ஆகுபெயரிலக்கணத்தை வேற்றுமைமயங்கியலுள் ஆசிரியர் கூறும் தமிழிலக்கணக் கோட்பாட்டின் நுண்மையினையும் செம்மையினையும் ஓராமல் யாவற்றையும் வடமொழி இலக்கணத்தொடு ஒப்பிட்டுக்காணும் திரிபுணர்வான் ஆகுபெயரைச் சொற்பொருள் உணர்த்தும் இலக்கணவகையாகத் தாமே எண்ணிக் கொண்டு ஆகுபெயரிலக்கணத்தைத் தொனிநூலுள் - அலங்காரநூலுள் கூற வேண்டுமெனக் கருதுவாருமுளர். அவர் சொற்குறிப்பு வேறு; செய்யுட்குறிப்பு வேறென்பதை உணராமல் தமிழ்நூலாசிரியர்பால் குறைகாண முயல்வோராவர் என அறிக. |
இனி ஆகுபெயர் என்னும் தொகை மொழி வினைத்தொகை யாதலின் முன்னர் ஆகியிருப்பனவும் அவ்வப்பொழுது ஆகுநவும் |