எல்லாம் அமையுமெனக் கொள்க. மரபு காரணமாக ஆகுபெயர்களுள் பல, ஆக்கச் சொல்லாகவே இருவகை வழக்கினும் வழங்கும் என்பதும் அறிக. எடுத்துக்காட்டாக, புளி என்பது ஒரு சுவையின் பெயர். அது அதனையுடைய பழத்திற்கு ஆகிப் பின்னர் அப்பழத்தினையுடைய மரத்திற்கு ஆயிற்று எனினும் இப்பொழுது மரம் ஆக்கப் பெயராகவும், பழம் ஆகுபெயராகவும் வழங்குகின்றன. இங்ஙனம் இயற்பெயராக மருவி வருவனவற்றையும் ஓர்ந்தறிந்து கொள்க. |
ஆகுபெயர் என்பது ஒரு சொல்லாகவே நிற்கும். ஒரோவழி அவ் ஆகுபெயர் அடையடுத்தும் நிற்கும். ஒரு பொருள் குறித்து இரு சொல்லாகவும் வரும். அவ்வழி அஃது இருபெயரொட்டு என வழங்கப்படும். எவ்வாறு நிற்பினும் ஆகுபெயர் தன்னொடு யாதானுமொரு இயைபு பற்றிய பிறிது ஒரு பொருளைக் குறிப்பான் உணர்த்துவது அதன் இலக்கணமாகும். "ஆகுபெயர்" என்பது சொல்லின் முடியும் இலக்கணத்ததாய் நிற்றலின் அதன் பாகுபாடுகளை மட்டுமே ஈண்டுக் கூறுகின்றார். |
சூ. 114 : | முதலிற் கூறும் சினையறி கிளவியும் |
| சினையிற் கூறும் முதலறி கிளவியும் |
| பிறந்தவழிக் கூறலும் பண்புகொள் பெயரும் |
| இயன்றது மொழிதலும் இருபெய ரொட்டும் |
| வினைமுத லுரைக்கும் கிளவியொடு தொகைஇ |
| அனைமர பினவே ஆகுபெயர்க் கிளவி |
[31] |
க-து : | பெயர் என்னும் எழுவாய் வேற்றுமை மயக்கமாகிய ஆகுபெயர், ஆகி வரும் மரபு பற்றிய கூறுபாடுகள் இவை என்கின்றது. |
|
உரை: 1) முதற் பொருளின் பெயரான் சினைப்பெயரை அறியக் கூறப்படும் சொற்களும் (2) சினைப் பொருளின் பெயரான் முதற் பொருளை அறியக்கூறப்படும் சொற்களும் (3) பொருள் தோன்றிய இடத்தாற் கூறப்படும் சொற்களும் (4) வண்ணம் வடிவு சுவை முதலாய பண்புப்பெயர்களாற் கூறப்படும் சொற்களும் (5) காரியமாகிய பொருள் அஃதியன்றதற்குரிய காரணத்தாற் கூறப்படும் சொற்களும் (6) ஒரு பொருளை விளக்க அடையாக வந்த சொல்லொடு ஒட்டுப்பட்டு நிற்கும் இருபெயரொட்டாகிய சொற்களும் (7) பொருளை இயற்றிய வினைமுதலாற் கூறப்படும் சொற்களொடு கூடி அத்தகைய மரபினவாய் வருவனவே ஆகுபெயர்ச் சொற்களாகும். |