பெயரியல்179

உரை :தநநுஎ  என்னும்  எழுத்துக்கள்  முதலாகிக்  கிழமை  குறித்து
நின்ற   னளர என்னும் இறுதிகளை உடைய சொற்களும் அவை போல்வன
பிறவும்     பெயர்     நிலைமையுற்றுவரின்    அவற்றை   விளியேற்கும்
பெயர்களொடு கோடல் இன்மைவேண்டும்.
 

அவையாவன :   தமன், தமள்   தமர்-நமன், நமள், நமர்-நுமன் நுமள்,
நுமர் -எமன் எமள், எமர் எனவும் தம்மான், தம்மாள், தம்மார் - நம்மான்,
நம்மாள்,  நம்மார் - நும்மான்,  நும்மாள்,  நும்மார் - எம்மான்,  எம்மாள்,
எம்மார் எனவும் வருவன.
 

அன்னபிறவாக    வருவன :   பிறன்,    பிறள்,   பிறர்,  பிறிது, பிற,
மற்றையான்,   மற்றையாள்,   மற்றையார், மற்றையது,  மற்றையவை   என
வருவனவும் யான், நீ, தான் என்னும் மூவிடப் பெயர்களும் ஆம்.
 

விளிமரபு முற்றியது.
 

5. பெயரியல்
 

கிளவியாக்கம்   முதலாக விளிமரபு ஈறாக உள்ள நான்கு இயல்களானும்
இருவகை வழக்கினும்  செப்பும்  வினாவுமாக  நிகழும்  சொற்கள் பெயரும்
வினையுமாக   ஆக்கம்   பெறுமாறும்,  அவை   தம்முள்  தொடருங்கால்
வழுவின்றியும்   மரபு   பற்றியும்    நிகழுமாறும் அவை  அல்வழியானும்
வேற்றுமை   வழியானும் தொடருங்கால்   எழுவாய்  முதலாக  விளியீறாக
எட்டுவகையாக   அமையுமாறும்,   அவ்எட்டனுள்   உருபும்   பொருளும்
காரணமாகச்   செயப்படுபொருள்   வேற்றுமை   முதலாக  இடப்பொருள்
வேற்றுமை ஈறாகவுள்ள ஆறும் வேற்றுமைத்தொடர் எனப்படுமாறும், முதல்
வேற்றுமையும்           விளிவேற்றுமையும்          அல்வழித்தொடர்
எனக்கொள்ளுமாறும்,    வேற்றுமை   உருபுகள்    விரிந்தும்,  மறைந்தும்
நின்று வேற்றுமைப்பொருள்  பயக்குமாறும்,   உருபும், பொருளும்  மயங்கி
வந்து    பொருள்    பயக்குமாறும்,   எட்டாவதாகிய விளிவேற்றுமையின்
இயல்பும் பற்றித் தொடர் மொழி இலக்கணங் கூறினார்.
 

இனி, அத்   தொடர்மொழிகட்கு   உறுப்பாகி   நிற்கும் பெயர் வினை
இடை   உரி என்னும்   நான்கு   சொற்களின்    இயல்பும், அவைபற்றிய
வழக்கும்      நெறியானே      புலப்படுத்தத்    தொடங்கி   முதற்கண்
அந்நால்வகைச்    சொற்கும்    உரிய    பொதுவிலக்கணங்களை  மூன்று
சூத்திரங்களான் உணர்திப் பின்னர் முதலாவ