பெயரியல்183

தந்து      நிற்றல்.      இருதிணைப்      பொருளின்றிச்     சொற்கள்
தோன்றுதலின்றாகலான்   அப்பொருளைச் சுட்டிவரும்    பெயர் முன்னும்
அப்பொருளின்புடைபெயர்ச்சி    முதலியவற்றை   உணர்த்தி வரும் வினை
பின்னுமாக வைக்கப்பெற்றன.
 

சூ. 160 :

இடைச்சொற் கிளவியும் உரிச்சொற் கிளவியும்
அவற்றுவழி மருங்கிற் றோன்று மென்ப 
[5]
 

க-து :

சிறப்பில்லா ஏனைய இரு சொற்கள் இவை என்கின்றது,
 

பொருள் :இடைச்சொல்லும்,  உரிச்சொல்லும்   மேற்கூறிய    பெயர்
வினைகளைச்   சார்ந்து அவற்றின்  வழியாகவும்  அவற்றின்  இடமாகவும்
தோன்றி நிற்கும்.
 

"அவற்றுவழி    மருங்கிற்     றோன்றும்"   என்றதனான்  இவற்றின்
சிறப்பின்மை  உணரலாம். வழியினும், மருங்கினும் என  விரித்துப் பொருள்
கொள்க.   அவற்றின்   வழி   மருங்காகி   அவற்றை   வேறுபடுத்தும் - நிறைவித்தும்    தம்பொருளுணர்த்தும்   நிலையை நோக்கி  இடைச்சொல்
முன்வைக்கப்பட்டது. சிறப்புடையவை  இரண்டு சிறப்பில்லாதவை  இரண்டு
என    வகைப்படுத்தியவாற்றான்    சொல்லின்   தொகை  நான்கென்பது
பெறப்பட்டது. இவற்றின்   இயல்புகளை நான்கு  இயல்களாக  அமைத்துக்
கூறுதலானும் அது தெளியப்படும்.
 

சூ. 161 :

அவற்றுள்
பெயரெனப் படுபவை தெரியுங் காலை
உயர்திணைக் குரிமையும் அஃறிணைக் குரிமையும்
ஆயிரு திணைக்கும் ஓரன்ன உரிமையும்
அம்மூ வுருபின தோன்ற லாறே

(6)
 

க-து :

இது முதலாகப் பெயர்ச் சொற்களுக்குரிய சிறப்பிலக்கணங் கூறத்
தொடங்கி அவை திணைபற்றி வகைப்படுமாறு இச்சூத்திரத்தான்
கூறுகின்றார்.
 

பொருள் :மேற்கூறப்பெற்றநால்வகைச்   சொற்களுள்   பெயர்ச்சொல்
என்று   கூறப்படுவனவற்றை   ஆராயுங்கால், அவை    தோன்றுமாற்றான்
உயர்திணைக்கே     உரிமை         உடையனவும்,     அஃறிணைக்கே உரிமையுடையனவும்         அவ்விருதிணைகட்கும்        ஒருங்கொத்த
உரிமையுடையனவும் என அம் மூன்று படிவத்தனவாகும்.
 

"உரிமையுடையனவும்" என்பது   உரிமையும் என விகாரப்பட்டுநின்றது.
உருபென்றது (உருப்படி) ஈண்டு