184பெயரியல்

வகைகளை   உணர்த்தி    நின்றது,  ஓரன்ன    உரிமை   என்பது உயர்
திணையாதற்கும்   அஃறிணையாதற்கும்   சமனாகநிற்கும்    நிலைமையை.
இங்ஙனம்  இருதிணைக்  கண்ணும் விரவுதலின்  அவ்வகையினை  விரவுப்
பெயர் என்றும், பொதுப்பெயர் என்றும் கூறுவர். எனவே பெயர்ச் சொற்கள்
உயர்திணைப் பெயர் அஃறிணைப்பெயர், விரவுப்பெயர் என மூவகைப்படும்
என்பதாயிற்று.
 

சூ. 162 :

இருதிணைப் பிரிந்த ஐம்பாற் கிளவிக்கும்
உரியவை உரிய பெயர்வயி னான

[7]
 

க-து :

கிளவியாக்கத்துள் இருதிணை ஐம்பாற்குரிய சொற்களை "னஃகான்
ஒற்றே    ஆடுஉ  வறிசொல்" என்பது முதலாய சூத்திரங்களான்
ஆக்கிக்  கொள்ளுமாறு   கூறிப்பின்னர் "இருதிணை  மருங்கின்
ஐம்பா  லறிய  ஈற்றின் நின்றி   சைக்கும்  பதினோ  ரெழுத்தும்
தோற்றந் தாமே வினையொடு வருமே" என வினைச்  சொற்கண்
பாலறியுமாறு கூறிப் பெயர்ச் சொற்களும்  வடிவான்  இருதிணை
ஐம்பால்களைக்  காட்டும்   என்பதனைப் "பெயரிற்   றோன்றும்
பாலறி கிளவியும்   மயங்கல்   கூடா" [கிளவி-11]  என்பதனான்
உய்த்துணர   வைத்தார்.    அந்நெறியானே   பெயர்ச்சொற்கள்
பாலுணர்த்தும் முறைமையை இச்சூத்திரத்தாற் கூறுகின்றார்.
 

உரை :இருதிணைக்கும்   உரியவாக   ஆடூஉவறிசொல்    முதலாகப்
பலவறிசொல் ஈறாகப்பிரிந்து   நின்ற   ஐம்பாற்  சொல்லுக்கும் மேற்கூறிய
பெயர்களிடத்தான சொற்களில் உரியவை உரியவாம்.
 

என்றது ; படர்க்கை  வினைகள் "னஃகான்"  ஒற்று  முதலாயவற்றொடு
கூடித்திரிபின்றிப்  பாலுணர்த்துமாறு   போலப்,  பெயர்ச்  சொற்கள் அவ்
ஈறுகளான் ஐம்பாற் சொற்கள் ஆதற்கு உரியவை உரியவையாம் என்றவாறு.
"உரியவைஉரிய"   என்றதனான்   அவ்வாற்றான்  உரிய   அல்லாதனவும்
உளவென்பதும்  'ஐம்பாற்    கிளவிக்கும்'   என்றதனான்   பிறஈறுகளான்
வருதற்குரியவையும் உளவென்பதும் பெறப்படும்.
 

அவை வருமாறு : அன்னவன்,  அன்னவள், அரசர்,  வணிகர், கரியது,
கரியன, என இவை னஃகான்  ஒற்று முதலியவாக  ஓதியவற்றான் பாலுணர
வந்தன, நம்பி,  நங்கை, கோ,  வேள் என இவை பிற ஈறுகளான் பாலுணர
வந்தன.  பெண்மகன், மக்கள்,  பெண்டு என்பவை  ஓதப்பெற்ற ஈறுகளான்
வந்து  அவற்றிற்குரிய பால்  காட்டாமல்  வேறுபால்  உணர்த்தி  நின்றன.
பிறவும் சான்றோர் வழக்கு நோக்கிக் கண்டு கொள்க.