188பெயரியல்

இனிச்   சுட்டு   முதலாகிய  அன்னும் ஆனும்  என்றதனான்  அவை
சுட்டெழுத்துக்களை  அடுத்துவரின்  அவன்,  இவன்,  அவான்,   இவான்
என்றன்றே     வரல்வேண்டுமெனின்,   அற்றன்று   சுட்டெழுத்துக்களின்
அடிப்படையில் வருவன அவன் இவன் உவன்  எனப்பிரிப்பப் பிரியா ஒரு
சொல்லாக  வரும்  என்பதுணர "  அவன்  இவன்  உவன் என  வரூஉம்
பெயரும்"    என    ஆசிரியர்    மேல்   விதந்து    கூறினமையானும்,
சுட்டெழுத்துக்கள் இடைச்சொல்லாதலின் இடைச்சொற்கள் தம்மீறு திரிதலும்
பிறிதவண்  நிலையலும்.  பிறவுமாகிய  இலக்கணத்தை  உடையவாதலானும்
ஈண்டுச் சுட்டென்றது  ஆன், ஈன்,  ஊன்  என்னும்   இடம்  உணர்த்தும்
சுட்டுப்பெயர்களின்  திரிபாக  வரும் அன்,  இன்,  உன் என்பவற்றை என
அறிக. இதனை  இவரிவர் கூறினார்  என்பதை   இன்னின்னார்  கூறினார்
எனவரும் வழக்கானும் அவ்வனைத்தும் என்பதனை அன்றியனைத்தும் என
ஆசிரியர் வழங்கலானும் உணர்க.
 

இனி அன்னன், அன்னான் என்பவை ஒப்பொடுவரூஉம் கிளவியாகாவோ
எனின் ?   ஆகா.   ஒப்பொடுவரின்   அன்னவன்   இன்னவன்  என்றே
வருதல்வேண்டும். என்னை? "அன்ன  என்னும்  உவமக்  கிளவி"  என்று
கூறியதல்லது   ஆசிரியர் 'அன்   என்னும்    உவமக்    கிளவி'   என
ஓதிற்றிலராகலின்  என்க.  அன்னவன்  அனையவன் என்பவை வழக்கினுள்
அன்னன்  அனையன்   என   விகாரமாய்க்குறைந்தும்  வரும்  ஆதலின்
அன்னன்  என்னும் சுட்டுப்பெயர் வேறு அன்னன் என்னும் உவமப் பெயர்
வேறு என்று  உணர்க. அன்னன் என்புழிச் சுட்டப்படும் பொருள் (தன்மை)
கிழமையாக   நிற்பின்   சுட்டுப்   பெயராம்:   உவமமும்   பொருளுமாக
(புலியன்னன்)   நிற்பின்   உவமப்    பெயராம்   என   இவை  தம்முள்
வேறுபாடுணர்க.
 

இனி,   உரையாசிரியன்மார்   அன்-இன்-உன்   என்னும்   சுட்டிடைச்
சொற்கள்   உளவாதலைக்கருதாராய்   இதற்கு  அவ்வாளன்   இவ்வாளன்
உவ்வாளன், அம்மாட்டான் -  இம்மாட்டான் - உம்மாட்டான் என்பவற்றை
எடுத்துக் காட்டினர். அவற்றுள் அன்னும் ஆனும் முறையே - ஆள் - மாடு
என்பவற்றை  அடுத்து  வந்தனவன்றிச் சுட்டுக்களை அடுத்து வாராமையின்
அவை சூத்திரக்கருத்திற்கு ஏலாமை அறிக.
 

அன்னர்   அன்னார்  என்னும்   பன்மைப்பெயர்  பெரும்பான்மையும்
ஒப்புணர்த்தியே வருதலின்  அர் ஆர் என்பவற்றொடு வரும் என விதந்து.
கூறாராயினர். அவை சுட்டுப் பொருள் உணர்த்தி வருமேல் அன்ன பிறவும
(பெய - 12) என்னும் புறனடையாற் கொள்க.