ஆயத்தார், கழகத்தார் எனவரும். அவையத்தான், அவையத்தாள் எனச் சிறுபான்மை ஒருமைப்பாலாயும்வரும். | வினைப்பெயராவன :- தொழில் காரணமாக வரும்பெயர்கள். அவை உண்டவன், தின்றவன், உண்டான், தின்றான் எனவரும். சாதி குறியாது கொல்லன், தச்சன், கூத்தன் என வருவனவும் கொள்க. பெண்பாற்கும் பலர்பாற்கும் ஒட்டிக்கொள்க. | உடைப்பெயராவன :- ஒன்றை உடையமையாகக் கொண்டிருத்தல் பற்றி எய்திய பெயர். அவை. குட்டுவன், பூழியன், வெற்பன், சேர்ப்பன், குழையன், வேலன், வில்லன் எனவரும். பெண்பாற்கும், பலர்பாற்கும் ஏற்பன அமைத்து ஒட்டிக்கொள்க. | பண்புகொள் பெயராவன :- வன்மை, வடிவு, சுவை, அளவு முதலிய குணம் பற்றி வரும் பெயர்களாம். அவை கரியன், கூனன், இனியன், நெடியன், நல்லன், தீயன் எனவரும். பெண்பாற்கும் பலர்பாற்கும் ஒட்டிக் கொள்க. | இவ் அறுவகைப் பெயரும் ஆடூஉ, மகடூஉ, பல்லோர் என்னும் மூன்றுபாற்கும் இயையுமாற்றான் வரும் என்பது உணர இனி வருவனவற்றைப் பல்லோர்க் குறித்த என விதந்து கூறினார் என அறிக. | பல்லோர்க்குறித்த முறைநிலைப் பெயராவன : பன்மை பற்றிவரும் முறைப் பெயர்களாம். அவை தாயர், தந்தையர், தாய்மார், தந்தைமார் எனவும் மாமன்மார், பாட்டன்மார் என வழக்கின்கண் வருவனவும் மகன்மார், மகள்மார் எனப் பன்மைப் பொருட்டாய் வருவனவும் கொள்க. | "கொடுங்கோற் கோவலர் பின்னின் றுய்ப்ப இன்னே வருகுவர் தாயர்" | (முல்லைப்பாட்டு. 15-16) | எனஅஃறிணைக் கண்ணும் வந்ததால் எனின்? ஆண்டு உயர்த்துக் கூறும் மரபினான் வந்தமை 'வருகுவர்' என்னும் உயர்திணை வினைமுடிபாற் பெறப்படுதலின் சொல்நிலையில் வழுவின்மை அறிக. | பல்லோர்க் குறித்த சினை நிலைப் பெயராவன : பன்மைப் பாலாய்ச் சினை காரணமாக முதலுக்கு எய்திய பெயர், அவை குருடர், செவியர், தலையர், வாயர் எனவரும். |
|
|