பெயரியல்205

சூ. 182 :

ஆண்மை சுட்டிய எல்லாப் பெயரும்
ஒன்றற்கும் ஒருவற்கும் ஒன்றிய நிலையே

(27)
 

க-து :

ஆண்மை    சுட்டிய   விரவுப்  பெயர்   இருதிணைக்கண்ணும்
விரவிவருமாறு கூறுகின்றது.
 

உரை:ஆண்மை   சுட்டிவரும்  விரவுப்பெயர்  நான்கும்  அஃறிணை
ஆண்மைப் பொருள் ஒன்றற்கும்  உயர்திணை ஆடூஉவிற்கும்  பொருந்திய
நிலையினவாகும்.
 

எ-டு :சாத்தன்   வந்தது  -  சாத்தன்  வந்தான். முடவன்  வந்தது -
முடவன்   வந்தான். முடக்கொற்றன்  வந்தது - முடக்கொற்றன்  வந்தான்.
தந்தை  வந்தது  -  தந்தை வந்தான், மகன்  வந்தது  -  மகன்  வந்தான்.
எனவும், சாத்தன்  ஒன்று  -  சாத்தன் ஒருவன் சாத்தன் இது  -  சாத்தன்
இவன் எனவும் வரும்.
 

சூ. 183 :

பன்மை சுட்டிய எல்லாப் பெயரும்
ஒன்றே பலவே ஒருவர் என்னும்
அன்றிப் பாற்கும் ஓரன் னவ்வே

(28)
 

க-து :

பன்மை  சுட்டிய  விரவுப் பெயர் இருதிணைக்கண்ணும் வருமாறு
கூறுகின்றது.
 

உரை :பன்மை  சுட்டிவரும்  மூன்று  பெயரும் அஃறிணைப் பொருள்
ஒன்றற்கும்,  அத்திணைப்பலவிற்கும்  உயர்திணை  ஆடூஉ மகடூஉ வாகிய
இரண்டற்குமுரிய  ஒருவர் என்று  சொல்லப்படும் அவ்  விருபாற்கும் ஒத்த
உரிமையவாம்.
 

மூன்றாவன:-  இயற்பெயர்  -   சினைப்பெயர்  -   சினை முதற்பெயர்
ஆகியவை. ஒருமை சுட்டிய பெயர்க்கும் இஃதொக்கும்.
 

"ஒன்று - பல" என்றதனான் அவை  அஃறிணை  என்பதும்  'ஒருவர்'
என்றதனான்   அஃது  உயர்திணை  என்பதும்  பெறப்பட்டன.  "ஒருவர்
என்னும்  பெயர்நிலைக்  கிளவி  இருபாற்கும்  உரித்தே தெரியுங் காலை"
(பெயரியல்-31) என்பதனான்  ஒருவர்  என்றது  ஆடூஉ  மகடூஉ   வாகிய
இரண்டும் என்பது புலப்படும்.
 

அகரச்சுட்டு   'அன்றி'   எனத்திரிந்து  நின்றது.   உரையாசிரியன்மார்
என்றிப்பாற்கும்   எனப்பாடங்கொண்டனர்.  "என்னும்"   என  முற்கூறிய
பின்னர்  அப்பொருட்டாகிய   என்று  என்பதனைப்   பின்னும்  கூறுதல்
பொருந்தாமையறிக.      அன்றி     என்னும்      அகரச்    சுட்டினது
இன்றியமையாமையை அவர் ஓர்ந்திலர்.