அம்முறைமையான் முதற்கண் அப்பொதுப் பெயர்களைக் காரணம்பற்றியும் தன்மைபற்றியும் தொகுதியாகவும் தனியாகவும் வகுத்துக் கொண்டு அவற்றிற்குக் குறியீடுதருகின்றார். அக்குறியீடுகளுள் பெண்மைப் பெயர் ஆண்மைப் பெயர் என்பவை தன்மைபற்றியும் ஒருமை பன்மை என்பவை பால் (எண்) பற்றியும் வந்த குறியீடுகளாகும். | அப்பொதுப் பெயர்கள் இருதிணைக் கண்ணும் விரவுங்கால் அவ்வத்திணைக்கண் அமைந்துள்ள பால்களொடு விரவுதல் வேண்டும். உயர்திணைக்கண் மூன்றுபாலும் அஃறிணைக்கண் இரண்டுபாலும் உள, (அஃறிணை ஒருமைப்பாலுள் ஆண்மை பெண்மை உடையனவும் இரண்டும் இல்லாதனவும் உள.) உயர்திணைக்குரிய பால்களுள் பல்லோரறியுஞ்சொல் விரவுதலின்மையின் அவை ஒழிந்த இரண்டுபாலொடு மட்டுமே பொதுப் பெயர் விரவிவரும். எனவே, இருதிணைக்கண்ணும் பொதுப் பெயர்கள் விரவுங்கால் ஆண்மை, பெண்மை, ஒருமை, பன்மை என்பவற்றொடு விரவும் என்பதைத் தெளியலாம். | அதனான், பெண்மை இயற்பெயர் முதலாக ஒவ்வொன்றையும் எடுத்துக் கொண்டு ஒவ்வொன்றும் இருதிணைக்கண்ணும் உள்ள ஆண், பெண், ஒன்று, பல என்பனவற்றுள் எவ்வெவ்வற்றொடு விரவுகின்றது என்பதனை ஆய்ந்து காணுங்கால், பெண்மைப் பெயர் நான்கும் உயர்திணைப் பெண்ணொடும் அஃறிணைப் பெண்ணொடும் விரவுதலையும் ஆண்மைப் பெயர் நான்கும் அவ்வாறே இருதிணை ஆணொடு விரவுதலையும் காணலாம். பன்மைப்பெயர் என்பது பால்பகா அஃறிணைப் பெயர்களேயாதலின் அவை அஃறிணையில் ஒன்றனொடும், பலவினொடும் உயர்திணையுள் ஆணொடும் பெண்ணொடும் விரவுதலை நோக்கி ஆசிரியர் பன்மை சுட்டிய எல்லாப் பெயரும் இந்நான்கு பாலொடும் விரவி வரும் என்றும் கூறினார். அவ்வாறே ஒருமை சுட்டிய பெயர் இருதிணையுள்ளும் உள்ள மூன்று ஒருமைப் பாலொடு விரவும் என்று கூறுவார். எனவே, பெண்மை இயற்பெயர் முதலாய பதினான்கு பொதுப் பெயர்களும் இருதிணைக் கண்ணும் சென்று விரவுதலைப்பற்றியனவே இவ்விலக்கண விதிகள் என்பதைத் தெளியலாம். மற்று ஒவ்வொரு விரவுப் பெயரும் எவ்வப்பால்களைக் காட்டும் என்பதோ, எவ்வப் பால்களை ஏற்கும் என்பதோ ஈண்டு ஆராய்ச்சி இல்லை என்பதும் புலனாகும். | ஆகவே, நூல்நெறியையும், விதியையும், விதிக்கப் பெறுவதனையும் நோக்காமல் "பன்மைப்பெயர்" என்பதைக் |
|
|