சினை என்பது ஒரு பொருளின் பகுதியேயாதலின் "ஒருவழி உறுப்பு" என்றது போல ஒரு பொருளின் பகுதிகளைக் குறிக்கும் போது பன்மையாகலின், பொருட் பன்மையேயன்றி இடப்பன்மையும் அடங்கப் பல்வழி என்றார். அது நிலமெல்லாம் செழித்தன, ஊரெல்லாம் திரண்டன என்றாற்போல வரும். அங்ஙனம் வருதலும் கொள்க. எல்லாம் என்பது உயர்திணைக்கண் தன்மைப் பன்மைக்கே வரும் என்பதும், எல்லாம் வந்தீர் என்னுமிடத்து அஃது அஃறிணை முன்னிலையே என்பதும் வருஞ்சூத்திரத்தாற் பெறப்படும். |
சூ. 188 : | தன்னுள் ளுறுத்த பன்மைக் கல்லது |
| உயர்திணை மருங்கின் ஆக்க மில்லை |
[33] |
க-து : | எல்லாம் என்னும் பெயர்நிலைக்கிளவி இருதிணைக்கண்ணும் விரவும் வழி இடம் வரையறுக்கின்றது. |
|
உரை:மேற்கூறிய எல்லாம் என்னும் பொதுப்பெயர் உயர் திணையிடத்து விரவுங்கால் தன்மைப்பன்மைக்கல்லது ஏனை ஈரிடத்தும் விரவுதலில்லை. |
தன்மைச்சொல் அஃறிணைக்கின்மையின் தன்னுள்ளுறுத்த என்றதனான் உயர்திணை என்பது பெறப்படும். எல்லாம் என்னும் சொல் எல்லாரும், எல்லீரும் எனத்திரிந்து முறையே உயர்திணைக்கண் படர்க்கையினும் முன்னிலையினும் வருமிடத்து அவை விரவுப் பெயராகா என்க. இதனை, "எல்லாரும் என்னும் படர்க்கை இறுதியும், எல்லீரும் என்னும் முன்னிலை இறுதியும்" (உருபியல்-19) எனவும், "எல்லாரும் என்னும் பெயர் நிலைக் கிளவியும் எல்லீரும் என்னும் பெயர்நிலைக் கிளவியும்" (பெயரியல்-10) எனவும் ஆசிரியர் கூறியவாற்றான் அறிக. |
இங்ஙனம் உயர்திணை இடத்தை வரைந்து கூறினமையின் அஃறிணைக்கண் தன்மை ஒழிந்த ஏனை ஈரிடத்தும் வரும் என்பது பெற்றாம். எ-டு : எல்லாம் வந்தேம் உயர்-த-பன்மை. எல்லாம் வந்தீர் அஃறி-மு-பன்மை எல்லாம் வந்தன அஃறி-ப-பன்மை, என வரும். |
இனி உரையாசிரியன்மார் ஆக்கமில்லை என்றதனான் சிறுபான்மை படர்க்கையிடத்து வருதல் கொள்க எனக்கூறி நெறிதாழிருங்கூந்தல் நின்பெண்டிரெல்லாம் (கலி-97) எனவும் கண்டனிர் எல்லாம் கதுமென வந்தாங்கே (கலி-140) எனவும் எடுத்துக்காட்டுப. அவையெல்லாம் செய்யுள் விகாரமாம் என்க. வழுவமைதி எனினும் ஒக்கும். |