உரை :இறைச்சிப் பொருள் பயக்குமிடத்துச் செய்யுளுட் கூறப்பெறும் விரவுப் பெயராய இயற்பெயர்கள், திணை உணர்தற்குத் துணையாக அவ்வந்நிலப்பொருள்மேற் றோன்றி வருதலான் அவை உயர்திணையைச் சுட்டமாட்டா. அஃறிணையையே சுட்டி நிற்கும். |
சாத்தன் சாத்தி என்றாற்போல வரும் - முதற் பெயரும், அஃறிணை, இயற்பெயரும் அடங்க இயற்பெயர்க்கிளவி எனப் பொதுப்பட ஓதினார். உறுப்பு முதலிய சார்புகளான் வெளிப்பட நிற்பின் அவை அஃறிணைப் பெயர் என்பது தாமே புலப்படுமாதலின் விரவுப் பெயர் எனற்கு ஏற்பப் பொதுப்பட நிற்பனவற்றிற்கே இவ்வதி இயையுமென அறிக. |
அகப்பொருட் செய்யுட்களை வரைந்து சுட்டுவதற்காக "இறைச்சிப் பொருள்வயின் செய்யுள்" என்றார். "இறைச்சி தானே உரிப்புறத் ததுவே" (பொருளியல் - 23) "இறைச்சியுட் பிறக்கும் பொருளுமா ருளவே" (பொருளியல் - 35) "அன்புறு தகுந இறைச்சியுட் சுட்டலும்" (பொருளியல் -36) என, ஓதுவனவற்றான் இறைச்சியின் இயல்பு அறிந்து உணர்க. |
இறைச்சி என்பது உள்ளுறையின் வகையேயாதலின் உள்ளுறை உவமம் பற்றிக் கருப்பொருளாக வரும் இயற்பெயரும் கொள்க. எ-டு : "கடுவன் முதுமகன் கல்லா மூலற்கு வதுவையயர்ந்த வண்பறழ்க் குமரி" எனவும் "மாதர் வண்டின் நயவருந்தீங்குரல் மணநாறு சிலம்பின் அசுணம் ஓர்க்கும் (நற் - 244) எனவும் கல்லாக்கடுவன் கணமலி சுற்றத்து மெல்விரல் மந்தி குறை கூறும் செம்மற்றே (குறிஞ்சிக்கலி-4) எனவும் கொடியை வாழி தும்பி இந்நோய் படுகதில்லம்ம (நற்றி - 277) எனவும் கொடுவரி வென்ற வருத்தமொடு நெடுவரை மருங்கின் துஞ்சும் யானை (குறிஞ்சிக்கலி - 13) எனவும் வரும். |
கடுவன், முதுமகன், மூலன் எனவும்; மாதர் வண்டு எனவும்; கல்லாக்கடுவன், மந்தி குறைகூறும், எனவும்; கொடியைதும்பி எனவும்; வருத்தமொடு துஞ்சும்யானை எனவும் உயர்திணைப் பண்புகளை ஏற்றிக்கூறி இறைச்சியும் உள்ளுறையும் பெறப்பட வைத்துள்ளமை கண்டு கொள்க. இவை பொதுப் பெயர்களாயினும் அஃறிணையையே சுட்டி நின்றவாறும் கண்டு கொள்க. |
சூ. 198 : | திணையொடு பழகிய பெயரலங் கடையே |
[43] |
க-து: | மேலைச் சூத்திரத்திற்கொரு புறனடை கூறுகின்றது. |