216வினையியல்

உரைமேலைச்சூத்திரத்துச்  செய்யுளுள்   இறைச்சிப்பொருள்வயின்
கிளக்கும்   இயற்பெயர்க்கிளவிகள்  உயர்திணையைச்   சுட்டா   என்றது,
ஐந்திணைஒழுக்கத்திற்குரிய    தலைமக்களுக்குரியவாகத்     திணையொடு
தொன்று தொட்டுப்  பயின்று வரும்    பெயர்   அல்லாத  விடத்தேயாம்:
என்றது,  திணையொடு  பழகிவரும் இப்பெயர்கள்  உயர்திணையைச் சுட்டி
(விரவுப்பெயராய்) வரும் என்றவாறு.
 

அவையாவன : காளை, மீளி, விடலை என்னும்  தொடக்கத்தன. திணை
என்றது     உரிப்பொருளாகிய     ஒழுகலாற்றினை.    அஃது    ஈண்டு
அவ்வொழுகலாற்றினையுடைய மக்கள் மேல்நின்றது.
 

எ-டு :  "வயக்களிற்றன்ன    காளையொடு   என்மகள்   கழிந்ததற்கு
அழிந்தன்றோ விலனே"  (அகம்-55)   எனவும்  "அருஞ்சுர  மிறந்தவென்
பெருந்தோட்   குறுமகள்  திருந்துவேல் விடலையொடு வருமெனத் தாயே"
(அகம் - 195)  எனவும்  "எம்மனோரிற் செம்மலும் உடைத்தே" (அகம்-34)
எனவும் வரும். இவற்றுள்   காளை,   விடலை  செம்மல் என்னும் விரவுப்
பெயர்கள் உயர்திணையைச்சுட்டி நின்றவாறு கண்டுகொள்க.
 

இவ்விரண்டு சூத்திரங்களும் விரவுப் பெயர் பற்றிய ஒழிபிலக்கணமாகும்.
இவற்றின்  நோக்கறிந்துரையாது  உரையாசிரியன்மார் நெகிழ்ந்து போயினர்.
இத்தகைய தொன்மரபுகளை ஓர்ந்தறிந்து கொள்க.
 

பெயரியல் முற்றியது.
 

6. வினையியல்
 

வினைச்சொற்கள் பற்றிய இயல்பும் மரபும்  உணர்த்துதலின் வினையியல்
எனப்பெயர் பெற்றது. இச்சொல் 'விண்' என்னும் அசைவுக் குறிப்புணர்த்தும்
உரிச்சொல் உடைமைப் பொருள்படும் ஐகாரத்தோடு கூடி 'விணை' என்றாகி
இலக்கணக் குறியீடு கருதித்திரிக்கப்பட்டு 'வினை' என நின்றது.
 

வினைச்சொல் என்பது  பெயர்ச் சொல்லாற் சுட்டப்பெறும்  பொருளின்
தொழிலாகிய புறநிகழ்ச்சியையும்  தன்மை  நிலையாகிய அகநிகழ்ச்சியையும்
உணர்த்தும்     இலக்கணக்குறியீடாகும்.   அசைவாகிய    புடைபெயர்ச்சி
காலத்தொடு தொடர்புடைய