வினையியல்219

தோன்றுமிடத்து       வெளிப்பட      நிற்றலேயன்றிக்    குறிப்பாகவும்
கொள்ளப்படும்   பொருள் நிலையை   உடையவாம்.   எனவே,   காலம்
வெளிப்பட  வரும்   வினைச்சொல், குறிப்பாக  வரும் வினைச்சொல் என
வினைச்சொற்கள் இருவகைப்படும் என்றவாறாம்.
 

உண்ணுதல் என்பது புடைபெயர்ச்சியை  உடையதொரு தொழில். அஃது
ஒரு வினைமுதலான்  நிகழ்ந்து முடிந்திருப்பின்  இறந்தகாலம். அத்தொழில்
தொடங்கப்     பெறாது     இருப்பின்      எதிர்காலம்.     தொடங்கி
முற்றுப்பெறாதிருப்பின் நிகழ்காலமாம். காலமுணர்த்தும் குறியீடுகள் வினைச்
சொல்லின்  இடையினும்,   இறுதியினும்   அச்  சொல்லொடு   நெறிப்படி
ஒன்றுபட்டுப் பிரித்துணர்தற்கு ஏலவும் ஏலாமலும் அமைந்து நிற்கும்.
 

ஒருமொழிப்புணர்ச்சியாய் வரலாற்று முறைமையான் நிற்கும்  இவற்றைப்
பிரித்து  வரையறை  செய்தல்  சாலாது  என்பார் "புணரியல்  நிலையிடை
உணரத்  தோன்றா"  (எழுத்து-482) என்றும்   வினைச்  சொல்லுள் காலம்
உணர்த்தும்  உறுப்புப் புணர்ந்தே நிற்குமென்பார் "வினைசெயல் மருங்கின்
காலமொடு வருநவும்    (இடை-2)  என்றும்   கூறினார்.   கூறினாரேனும்
மாணாக்கர்க்குச்  சொற்பொருளை உணர்த்துமிடத்து   நூல்நெறி பிறழாமல்
இயலும் வகையான்  பிரித்துணர்த்தல்  வேண்டுமென்பார். "சொல்  வரைந்
தறியப் பிரித்தனர். காட்டல்"  (எச்ச-67)  எனவும்  ஆணை கூறினமையான்
உரை விளக்கத்துள்  காலங்காட்டும்  இடைச்சொற்கள்  ஓராற்றான் பிரித்து
உரைக்கப்படுமென்க.
 

சூ. 202 :

குறிப்பினும் வினையினும் நெறிப்படத் தோன்றிக்

காலமொடு வரூஉம் வினைச்சொல் எல்லாம்

உயர்திணைக் குரிமையும் அஃறிணைக் குரிமையும்

ஆயிரு திணைக்கும் ஓரன்ன உரிமையும்

அம்மூ உருபின தோன்ற லாறே

(4)
 

க-து :

வினைச்சொற்கள்   திணைவகையான்   பாகுபாடு    பெறுமாறு
கூறுகின்றது.
 

உரை :குறிப்புப்   பொருண்மை  பற்றி  வரும் சொல்லானும், தொழிற்
பொருண்மை    பற்றிவரும்   சொல்லானும்  முறையாகத்   தோன்றிவரும்
வினைச்சொற்கள்  எல்லாம் தோன்றுமாற்றான் உயர்திணைக்கே உரியனவும்
அஃறிணைக்கே உரியனவும்  அவ்  இருதிணைக்கும் ஒப்ப உரியனவும் என
அம் மூன்று படிவத்தனவாகும்.