270வினையியல்

அற்றேல்  அன்பு   அறம்பயக்கும்   எனப்  பண்புச்சொல்லும்  செய்யு
மென்னும்   முற்றான்  முடிதலின்   செயற்   பண்பினைச்   சுட்டிக்கூறிய
தென்னை எனின்?  அன்புடைமை அறம்  பயக்கும்  எனக்குறிப்பு  வினை
ஆண்டுத்  தொக்கு நின்றல்லது அங்ஙனம்  முடியாதென  அறிக. என்னை?
பண்பாவது  ஒருபொருளின்கண் கிடப்பதல்லது  தான்  செயல்படாதாகலின்
என்க.   அதனானன்றே   'அழுக்காறு    தீயுழி  உய்த்துவிடு மென்னாது"
அழுக்காறென ஒருபாவி  என உருவகப்படுத்தோதினார் பொய்யாமொழியார்
என்க.
 

இச்சூத்திரத்தான்  ஒருசார்  பொருள்பற்றிய  நிகழ்காலச்சொல்  ஏனைய
இரண்டு     காலத்தொடும்   மயங்குமாறு    கூறப்பட்டது.   இச்சூத்திரம்
முந்நிலைக்காலமும்  (வினை - 43)  என்னும் சூத்திரத்தின்  பின் இருத்தல்
வேண்டும்.
 

இச்சூத்திரத்திற்கு   உரையாசிரியன்மார்   கூறும் உரையும் விளக்கமும்
இன்னோரன்ன    இன்றியமையா     இலக்கணக்கூறுகளைப்   பெறப்படச்
செய்யாமையை உணர்க.
 

சூ. 244 :

இதுசெயல் வேண்டும் என்னும் கிளவி

இருவயின் நிலையும் பொருட்டா கும்மே

தன்பா லானும் பிறன்பா லானும்

(46)
 

க-து:

செய்யும்   என்னும்    வாய்பாட்டின்  பாற்படும்   "வேண்டும்"
என்னும் சொல்லினது பொருள் நிலை வேறுபடுமாறு கூறுகின்றது.
 

உரை:"இதுசெயல்   வேண்டும்"   என்னும்  வாய்பாட்டான்  வரும்
"வேண்டும்" என்னும் சொல், தன்பாலும் பிறன்பாலுமாகிய இரண்டன்பாலும்
நிலைபெறும் பொருண்மைத்தாகும்.
 

கிளவி    என்பது 'இதுசெயல்   வேண்டும்'   என்னும்   தொடர்க்குப்
பொதுவாய்  நின்றதேனும்,   இருவயின்  நிலையும்  பொருட்டாதற்கேற்பது
வேண்டும் என்னும்   சொல்லேயாகலின்   வேண்டுமென்னும்   வாய்பாடே
கொள்ளப்படும்.
 

(தன்) தான்  என்பதும் படர்க்கையே ஆதலின் இருவயின் என்றது அவ்
விரண்டன்பாலும் என்றவாறாம்.
 

"இருவயின் நிலையும் பொருட்டாகும்" என்றது இதுவென்று சுட்டப்படும்
பொருட்பெயர்க்கும்  அதுவல்லாத  பிறபொருட் பெயர்க்கும் பயனிலையாக
நிற்றலை. 'இது' என்பது வினை