சூ. 247 : | செயப்படு பொருளைச் செய்தது போலத் |
| தொழிற்படக் கிளத்தலும் வழக்கியன் மரபே |
(49) |
க-து : | வழக்கின்கண் வினைச்சொல் பற்றி நிகழ்வதொரு மரபு கூறுகின்றது. |
|
உரை : செயப்படுபொருள் வினையாகக் கிளத்தலை வினைமுதல் வினை போலத் தொழிற்படச் சொல்லுதலும் பரவை வழக்கின்கண் நிகழும் மரபாகும். உம்மையான் அங்ஙனம் கிளவாமை பெரும்பான்மை என்பதாம். |
எ-டு: திண்ணை மெழுகிற்று - சோறு அட்டது எனவரும். மெழுகப்பட்டது - அடப்பட்டது எனச் செயப்படுபொருள் வாய்பாட்டாற் கூறாமல் வினைமுதல், வாய்பாட்டாற் கூறப்பட்டவாறு காண்க. |
இனி, மரம் வெட்டியது என்றாற் போலவன்றி மரம் வீழ்ந்தது எனவரின் அது செயப்படு பொருளுக்குரித்தாகாமையின் செயப்படு பொருள் எனற்கு ஏற்ற தொழிலாற் கிளக்க வேண்டுமென்பார் தொழிற்படக் கிளத்தலும் என்றார். |
"வழக்கியன் மரபே" என்றதனான், இவ்வாள் வெட்டிற்று, இவ்எழுத்தாணி எழுதியது எனக் கருவியைச் செய்தது போலக் கிளத்தலும் கொள்க. |
"வன்புற வரூஉம்" என்னும் சூத்திரமும் இச்சூத்திரமும் எச்சவியலுள் இருத்தல் வேண்டும். |
சூ. 248 : | இறப்பே எதிர்வே ஆயிரு காலமும் |
| சிறப்பத் தோன்றும் மயங்குமொழிக் கிளவி |
|
(49) |
க-து : | இறந்தகாலச் சொல்லும் எதிர்காலச் சொல்லும் மயங்குமாறு கூறுகின்றது. |
|
உரை:இறப்பும் எதிர்வுமாகிய காலமுணர்த்தும் அவ்விரு சொற்களும் மயங்குமொழிப் பொருளவாய்ச் சிறப்பத் தோன்றி வரும். |
இம்மயக்கம் காலப்பெயரும் வினைச் சொல்லுமாய் வருதலின் "மயங்குமொழிக் கிளவி" என்றார். [காலப்பெயர் : நெருநல் - நாளை முதலியவை] |
எ-டு : இவர் பண்டுஇப் பொழிலகத்து விளையாடுவார் எனவும்,நாளை அவன் வெகுண்டு வாளொடு வந்தான் நீ என் செய்குவை? எனவும் வரும். |