க-து : | இடைச் சொற்களின் வகை கூறுகின்றது. | | உரை:மேற்சொல்லப் பெற்ற இடைச்சொற்கள்தாம் நுவலுங்காலை நிறுத்த சொல்லும் குறித்துவருகிளவியும் புணர்ந்தியலும் நிலைமைக்கண் அவற்றின் பொருள் நிலைமை உணர்தற்கு உதவுவனவும், வினைப்பெயர் வினைச் சொல்லாகி இயக்கமுணர்த்துமிடத்துக் காலங்காட்டுதலொடு வருவனவும், வேற்றுமைப்பொருள் விரியுமிடத்து உருபாக வருவனவும், அசைநிலை என உணர்த்தும் சொல்லாக ஆகிவருவனவும், இசை நிறைக்கும் சொல்லாக ஆகிவருவனவும், கூறுவோர்தாம் குறித்த குறிப்பிற்கேற்பப் பொருள் இயன்று வருவனவும், ஒக்கும் என்னும் ஒத்தற்பொருள் இல்லாத வழியும் அவ்வொப்புப் பொருளை உணரச் செய்வனவும் என்று சொல்லப்படும் அவ் ஏழு இயல்பினவாகும். | அப்பண்பினான் அவை எழுவகைப்படும் என்றவாறு. பண்பென்றது ஈண்டு 'இயல்பு' என்னும் பொருட்டாய் நின்றது. | 1) புணரியல் நிலையிடைப் பொருள்நிலைக் குதநவும் என்பதனைப் புணரியல் நிலைக்கு உதநவும், பொருள் நிலைக்குதநவும் எனப் பிரித்துக் கூட்டிப் பொருள் காண்க. அவையாவன : இருமொழிப் புணர்ச்சியுள்ளும், ஒரு மொழிப் புணர்ச்சியுள்ளும் வரும் சாரியைகளாம். | எ-டு : மரத்துக்கிளை - அவற்றுக்கோடு - வண்டின் கால் - பதிற்றகல் எனவரும். இவ் இருமொழிப் புணர்ச்சியுள் 'அத்து, வற்று, இன்' என்பவையும், கண்டனம், கண்டனன் எனவரும் இவ் ஒரு மொழிப் புணர்ச்சியுள் அன் என்பதும் புணரியல் நிலைக்குதவின. எல்லாவற்றையும், எல்லாநம்மையும் எனவரும் இவற்றுள் வற்றுச் சாரியை நிலைமொழிப் பொருள் அஃறிணை என்பதும் நம்முச்சாரியை நிலைமொழிப் பொருள் உயர்திணை என்பதும், சித்திரையாற் கொண்டான், சித்திரைக்குக் கொண்டான் என வருபவற்றுள் ஆன் சாரியை நிலைமொழி நாட்பெயர் என்பதும் இக்குச் சாரியை நிலைமொழி திங்கட்பெயர் என்பதும் உணரப் பொருள்நிலைக்கு தவின. பிறவும் இவ்வாறே கண்டு கொள்க. | 2) வினைசெயன் மருங்கிற் காலமொடு வருநவும்:- திணையும் பாலும் இடமும் காட்டும் இறுதி இடைச்சொற்களும், காலங்காட்டும் இடைச் சொற்களுமாம். இதனை வினை செயல் மருங்கின் வருநவும் காலமொடு வருநவும் எனப்பிரித்துக் கூட்டிப் பொருள் கொள்க. |
|
|