எ-டு : "அந்திற் கச்சினன் கழலினன்" (அகம்-79) "ஆங்கக் குயிலும் மயிலுங்காட்டி" என்பவை சீராக அசைத்து அடிநிரப்பி நின்றன. "அதுமற் றவலங் கொள்ளாது நொதுமற்கலுழும்" "உரைமதி வாழியோ வலவ" என்பவை சீர்க்கு உறுப்பாய் அசைத்து வந்தன. "பழமுதிர் சோலை மலைகிழ வோனே" ஏகாரம் ஈற்றசையாய்ச் சீர்நிறைத்து நின்றது- |
5) இசைநிறைக் கிளவி : என்பது சார்ந்த சொல்லின் பொருட்குத் துணையாகச் செய்யுட்கண், சீர் நிறைத்து ஓசை பற்றி வரும். எ-டு : ஏஎ இஃதொத்தன் என்பெறாஅன் கேட்டைக்காண்" எனவும் "அளிதோ தானேயது பெறலருங் குரைத்தே" எனவும் வரும். |
6) தத்தங் குறிப்பிற் பொருள் செய்குநவும் : இது பல நிலைகளில் வரும். எ-டு : கூரியதோர் வாள்மன்-வருகதில் அம்மவெம் சேரி சேர - சாத்தனும் வந்தான், கொன்னூர் துஞ்சினும் என வரும். இவை இடம் நோக்கிப்பொருள் தருவன ஆதலின் "தத்தங் குறிப்பின்" என்றார். சாரியை இடைச்சொல் முதலியன பொருள் தருதலும் "குறிப்பே" எனினும் அவை ஓராற்றான் வரையறைப்படுதலின் அவை ஒழிந்த ஏனையவற்றிற்கே இக் குறியீடு செய்தார் என்க. |
7) ஒப்பில் வழியாற் பொருள் செய்குந : உவமவியலுள் பெறப்படும். எ-டு : "எரியகைந் தன்ன தாமரை" "யாழ்கெழு மணிமிடற் றந்தணன்" - "குறுந்தொடி ஏய்க்கும் மெலிந்து வீங்கு திவவின்" "விண் பொருபுகழ் விறல் வஞ்சி" "மகன்றாயாதல் புரைவதாலெனவே" என உவமச்சொல் இடைச்சொல்லாக வரும். பிறவும் உவமவியலுரையுட் கண்டு கொள்க. இதனைத் தத்தங்குறிப்பிற் பொருள் செய்குநவற்றின் பின் வைத்தமையான் இவையும் தத்தங்குறிப்பின் பொருள் செய்வனவாம். |
ஈண்டு வகைப்படுத்திய ஏழனுள் முதல்நின்ற மூன்றும் மேலே உணர்த்தப்பட்டமையின் முன்வைக்கப் பெற்றன, ஒப்பில் வழியாற் பொருள் செய்வன இனி உவமவியலுள் உணர்த்தப்படுதலின் பின் வைக்கப்பட்டது. ஏனைய மூன்றும் இவ்வியலுள் உணர்த்தப்படுதலின் இடையே வைக்கப்பட்டன. |
சூ. 252 : | அவைதாம் |
| முன்னும் பின்னும் மொழியடுத்து வருதலும் |
| தம்மீறு திரிதலும் பிறிதவண் நிலையலும் |
| அன்னவை யெல்லாம் உரிய என்ப |
|
(3) |