இடையியல்283

4) கற்கவோ   வந்தான்?  என்பது  விளையாடற்கு   வந்தான்  எனத்தான்
கருதிய  பொருள்   தருதலின்   ஒழியிசை   ஓகாரமாம்.   5) திருமகளோ
அல்லள் - அரமகளோ  அல்லள்  இவள்  யார்?  என்பது  ஆய்வின்கண்
வருதலின்    தெரிநிலை    ஓகாரமாம்.    6) ஓஒ   பெரியன்   என்பது
பெருமையைவிதந்து    கூறுதலின்    சிறப்பு    ஓகாரமாம்.   இவ்ஓகாரம்
அளபெடுத்தே வரும் எனப் பின்னர்க் கூறுவார்.
 
சூ. 258 :

தேற்றம் வினாவே பிரிநிலை எண்ணே

ஈற்றசை இவ்வைந் தேகா ரம்மே 

[9]
 

க-து:

ஏகார இடைச் சொல்லின் பொருட்குறிப்பு இவை என்கின்றது.
 

உரை: ஏ, என்னும் இடைச்சொல் தெளிவும்,  வினாவும்,  பிரிநிலையும்
எண்ணுதலும் ஈற்றசையும் என ஐந்து பொருட் கூறுபாட்டதாகும்.
 

எ-டு : உண்டேஎ  மறுமை, வாய்மையேஎ வெல்லும். என வரும் இவை
தேற்றேகாரம். நீயே கொண்டாய்?   என்பது   வினா   ஏகாரம்.  இவனே
வலியன்  -   என்பது    பிரிநிலை   ஏகாரம்.   நிலனே,   நீரே, தீயே, 
வளியே   என    எண்ணுதற்கண்வரும்      ஏகாரம்     எண்ணேகாரம்.
வாடாவள்ளியங்காடிறந்தோரே -  எனச்சீர்  இறுதிக்கண்   வரும்  ஏகாரம்
ஈற்றசை    ஏகாரம்.    ஈறு    என்பதற்குச்      செய்யுளீறு      எனப்
பொருள் கூறின்குன்றக் கூறலாம் என்க. ஏகாரம்  அசையாக முதற்கண்ணும்
வருமாதலின் ஈற்றசை என்றார். பொருட்குறிப்புக்களொடு அசைநிலையையும்
உடன் ஓதினார்.  "கூற்றுவயின்  ஓரளபாக  இசைத்தலும்  உரித்"  தெனப்
பின்னர்  எடுத்து  விதத்தலைக்  கருதி  என்க.  ஏகார இடைச் சொல்லின்
இயல்புபற்றி ஒருங்கு கூறினார் எனினும் அமையும்.
 

சூ. 259 :

வினையே குறிப்பே இசையே பண்பே

எண்ணே பெயரோ டவ்வறு கிளவியும்

கண்ணிய நிலைத்தே எனவென் கிளவி

[10]
 

க-து:

'என' என்னும்  இடைச்  சொல்லின்   பொருட்குறிப்பு   இவை
என்கின்றது.
 

உரை: என  என்னும்    இடைச்சொல்,   வினைப்பொருண்மையும் -
குறிப்புப்       பொருண்மையும்,          இசைப்     பொருண்மையும்,
பண்புப்பொருண்மையும்     எண்ணுதற்      பொருண்மையும்,   பெயர்ப்
பொருண்மையும் ஆகிய ஆறும் குறித்த சொற்பொருளைக்   கருதி  வரும்
நிலைமையதாகும்.