இடையியல்297

எ-டு : மலைநிலம்  பூவே  துலாக்கோலென்றின்னர், எனவும் தோற்றம்
இசையே நாற்றம் சுவையே உறலோ டாங்கைம் புலனென மொழிப, எனவும்
வரும்.
 

சூ. 290 :

உம்மை தொக்க எனாவென் கிளவியும்

ஆவீ றாகிய என்றென் கிளவியும்

ஆயிரு கிளவியும் எண்ணுவழிப் பட்டன 

[41]
 

க-து:

எனா,  என்றா  என்னும்  இடைச்   சொற்கட்காவதொரு  மரபு
கூறுகின்றது.
 

உரை : உம்மை தொக்குவரும் எனாவென்னும் இடைச்சொல்லும் ஆகார
ஈற்றதாகிய  என்றா  என்னும்  இடைச்சொல்லும்  ஆகிய  இரண்டு இடைச்
சொற்களும் எண்ணுதற் பொருளினவாம்.
 

"ஆ ஈறாகிய  என்று"  என்பது  'என்றா' என்னும் இடைச் சொல்லாம்.
இவை முறையே என, என்று என்பவற்றின் திரிபாயினும்  எண்ணுப்பொருள்
பற்றியல்லது  இவை  வாராமையின்  வேறாக  ஓதப்பட்டன.  எனா-என்றா
என்பவை  'என்று  சொல்லப்படுவன'     என்னும்   பொருளினவாதலின்
அவற்றுள் எண்ணும்மை மறைந்து நின்று எண்ணுப் பொருள் தரும் என்பது
தோன்ற "உம்மை தொக்க எனாஎன்  கிளவியும் ...  என்றென்  கிளவியும்"
என்றார். உம்மை தொக்க வழி அவை வினைப்பொருள்  ஒழித்து எண்ணுப்
பொருள் மட்டுமே பயந்து நிற்றலின் "எண்ணு வழிப்பட்டன" என்றார்.
 

எ-டு : நிலனெனா  நீரெனாத்  தீயெனா  வளியெனா வானெனாப்பூதம்
ஐந்து,  எனவும்   நிலனென்றா   நீரென்றாத்   தீயென்றா   வளியென்றா
வானென்றாப்   பூதமைந்து,    எனவும்    வரும்.   'எண்ணுவழிப்பட்டன'
என்றதனான் இடையிட்டு வருதலும்  கொள்க.  யாத்தசீரே  அடியாப்பெனா
எனவும், ஒப்பும் உருவும் வெறுப்பும் என்றா எனவும் வரும்.
 

சூ. 291 :

அவற்றின் வரூஉம் எண்ணின் இறுதியும்

பெயர்க்குரி மரபின் செவ்வெண் இறுதியும்

ஏயின் ஆகிய எண்ணின் இறுதியும்

யாவயின் வரினும் தொகையின் றியலா 

[42]
 

க-து :

தொகை   பெற்று   வரும்   எண்ணிடைச்   சொற்கள்  இவை
என்கின்றது.
 

உரை:மேற்கூறிய எனா,   என்றா  என்பவற்றான்   வரும் எண்ணின்
இறுதியும் பெயர்க்கு உரியவாய் இம்மரபினான்