இடையியல்301

க-து:

தத்தங்குறிப்பிற்     பொருள்     செய்வனவற்றிற்கு  ஓதப்பெற்ற
பொருளினின்று   அவை  ஒரோ வழி வேறுபட்டு வருமென்பதும்
வேறுபடுதற்குச் சார்பும் கூறுகின்றது.
 

உரை:மேற்கூறிய   இடைச்  சொற்கள், அவ்வச் சொற்கு அவையவை
பொருளென   அவ்வப்பொருள்   கொள்ளுமாறு    கிளந்து   கூறப்பெற்ற
இலக்கணத்தனவாயினும்;   அவையவை    முன்னும்    பின்னும்   வரும்
வினைச்சொல்லொடும்   பெயர்ச்   சொல்லொடும்   வைத்து   ஆராய்ந்து
உணருமாறு தோன்றித்   திரிந்து வேறுபட்டுவரினும், அவ்வேறுபாட்டினைத்
தெரிந்து பொருத்துமாறு அமைத்துக் கொள்க.
 

முன்னர்ப் "பெயரொடும்   வினையொடும் நடைபெற்  றியலும்" என்றது
எல்லா இடைச்சொற்கும்   அவை  வரும் இடம்  கூறும் முகத்தான் பொது
விலக்கணம் கூறியவாறாம். ஈண்டு "வினையொடும்  பெயரொடும்  நினையத்
தோன்றி" என்றது தத்தம் பொருளவாய் வரும்  இடைச்சொற்கள்  பல்வேறு
பொருள்   குறித்து    நிற்பதற்குக்   காரணங்    கூறுமுகத்தான்,  தத்தம்
பொருளவாய்வரும்   இடைச்சொற்களுக்குப்     புறனடை   கூறியவாறாம்.
அதனான் அவ்வேறுபாடு தோன்ற ஈண்டு வினை முற்கூறப்பட்டதென்க.
 

எ-டு : "சென்றீ   பெருமநிற்  றகைக்குநர்   யாரோ"  என   ஓகாரம்
ஈற்றசையாக வந்தது. "அதுமன் கொண்கன் தேரே"  மன்  அசைநிலையாக
வந்தது.  "ஊரெனப்  படுவது  உறையூர்"  என   என்பது   சிறப்பின்கண்
வந்தது.  "ஒக்கல்  வாழ்க்கை   தட்குமா   காலே"   மா  அசைநிலையாக
வந்தது. "படர்ந்  தோர்க்குக்   கண்ணும்   படுமோ   என்றிசின்  யானே"
உம்   அசைநிலையாக   வந்தது.  பிறவும்   அவ்வாறு    வருவனவற்றை
ஓர்ந்தமைத்துக் கொள்க.
 

சூ. 297:

கிளந்த வல்ல வேறுபிற தோன்றினும்

கிளந்தவற் றியலான் உணர்ந்தனர் கொளலே

(48)
 

க-து:

இவ் இயலுக் காவதொரு புறனடை கூறுகின்றது.
 

உரை:மேற்   கிளந்துகூறப்பெற்றவையன்றி   வேறுபிறவாக   இடைச்
சொற்கள்   தோன்றிவரினும்    மேற்கூறப்பெற்ற   இலக்கண   நெறியான்
அவற்றைத் தெரிந்தமைத்துக்கொள்க.
 

கிளந்த    இயல்பாவது,     பெயரொடும்     வினையொடும்   நடை
பெற்றியலுதலும், வினையொடும் பெயரொடும் நினையத்