உரியியல்303

ஒருசொல் இருதிணைப்  பொருளுள்   ஒன்றை   இடமாகக்  கொண்டு
தோன்றுங்கால்  அப்பொருள்பற்றி   உள்ளத்தின்கண்   நிகழும்  குறிப்பும்
புலன்களினிடமாக நிகழும் இசையும் பண்பும் ஆகியவற்றின் அடிப்படையில்
வடிவு நிரம்பாமல் உயிரீறாகவோ புள்ளியீறாகவோ முகிழ்த்து ஒருநெறிப்பட
வாராமல்  குறையாக   நிற்கும்   நிலையே   உரிச்சொல்லின்  அடிப்படை
நிலையாகும்.   இதனை   ஆசிரியர்   'உயிரும்  புள்ளியும்   இறுதியாகிக்
குறிப்பினும்  பண்பினும்   இசையினும்    தோன்றி   நெறிப்பட   வாராக்
குறைச்சொற்  கிளவி'   (எழுத் - 482)   எனக்கூறுமாற்றான்   அறியலாம்.
குறைச்சொல்லாவது நிரம்பா உரிச்சொல்.
 

இசை  என்பது   செவிப்புலனுக்குரியது,  ஏனைய மெய்வாய் கண்மூக்கு
ஆகியவற்றிற்குரிய உணர்வுகள் பண்பு  என  அடங்கும்.  மொழி  என்பது
செவிப்புலனுக்குரிய    பொருளாகலின்    அச்சிறப்பு     நோக்கி   இசை
பிரித்துணர்த்தப்பட்டது.
 

அக்     குறைச்சொற்கள்,      பெயர்ச்சொல்,   வினைச்சொற்களுக்கு
முதனிலையாதற்கேற்ற   எழுத்தொடு   கூடிப்  பொருள்  தருதற்கு  ஏற்ப
நிற்கும்நிலை  நிரம்பிய   உரிச்சொல்லாகும்,   இதனைப்  பகுதி  என்றும்
முதனிலை என்றும் கூறுவர். அங்ஙனம்  உருப்பெற்று  நிரம்பிய  சொற்கள்
இசை, குறிப்பு,  பண்பு  என்பனவற்றுள்  ஏற்புடையவற்றைச்  சார்ந்து பால்
காட்டும் இடைச்சொற்களொடு  கூடிப்  பெயர்ச்   சொல்லாயும்,  பாலொடு
காலங்காட்டும் உறுப்புக்களொடு கூடி வினைச்சொல்லாயும் முழுமை பெறும்.
பால்  முதலியவற்றைக்   காட்டும்  உறுப்புக்களொடு   கூடாத வழி அவை
பெயரினும்   வினையினும்   தன்வடிவு   (உருபு)   தடுமாறுதற்குரியவாய்ப்
பொதுப்பட நிற்கும்.  அந்நிலைமைக்கண்  ஓர் உரிச்சொல் பலபொருட்கும்,
பல உரிச்சொற்கள் ஒரு பொருட்கும் உரிமை தோன்ற நிற்கும்.
 

இவ்வியல்புகளைப்   'பன்முறையானும்   பரந்தன வரூஉம் உரிச்சொல்
எல்லாம் பொருட்குறை கூட்ட இயன்ற  மருங்கின்'  (உரி - 100)  எனவும்
"உரிச்சொற்கிளவி விரிக்குங்  காலை  இசையினும்  குறிப்பினும் பண்பினும்
தோன்றிப் பெயரினும் வினையினும்  மெய்தடுமாறி  ஒருசொல் பலபொருட்
குரிமை தோன்றினும் பலசொல் ஒருபொருட் குரிமை தோன்றினும்" (உரி -
1) எனவும் ஆசிரியர் கூறுமாற்றான் அறியலாம்.
 

குறைச்சொற்  கிளவிகள்  பொருட்குறை  கூட்ட இயன்ற மருங்கின்(உரி
-100)    உருப்பெற்று    எழுவாயாகி     வேற்றுமையுருபுகளை   ஏற்கும்
நிலைமைக்கண் வினைப்பெயர்களாம்.