உரை:நால்வகைச் சொற்களுள் உரிச்சொற்களை விரித்துணர்த்துமிடத்து இசையும் குறிப்பும் பண்பும் ஆகிய பொருண்மைக்கண் முகிழ்த்துப், பெயரின் கண்ணும் வினையின் கண்ணும் தம்வடிவு தடுமாறி ஒருசொல் பலபொருட்கு உரிமையுடையதாய்த் தோன்றுதற்கண்ணும் பலசொல் ஒருபொருட்கு உரிமையுடையவாய்த் தோன்றுதற்கண்ணும், தத்தம் மரபொடு வந்து தனித்தும் பெயர் வினைகட்கு அடையாயும் நிலை பெறுமிடத்து அவை எச்சொல்லாயினும் வழக்கின்கண் பயின்று வாராத சொற்களைப் பயின்ற சொற்களொடு சார்த்திப் பொருள் வேறுபாடு தெரியுமாறு கிளந்து கூறுக. | "உயிரும் புள்ளியும் இறுதியாகிக் குறிப்பினும் பண்பினும் இசையினும் தோன்றி" (எழுத்து-482) என எழுத்ததிகாரத்துட் கூறியது நெறிப்படவாராக் குறைச்சொற் கிளவிக்குரிய இலக்கணமாம். ஈண்டுக் 'கூறியது பொருட்குறை கூட்ட இயன்ற மருங்கின்' (உரிச் - 98) நிரம்பி நிற்கும் உரிச்சொற்கிளவிக்குரிய இலக்கணமாம். ஆண்டுப் பொருளுணர்ச்சிக்கு அடிப்படையாகிய குறிப்பினை முற்கூறியதும், ஈண்டுச் சொல்லுணர்ச்சிக்கு அடிப்படையாகிய இசையினை முற்கூறியதும் அக்கருத்தானேயாகும். ஆதலின் கூறியது கூறிற்றாகாமை அறிக. இதன்பயன், ஆண்டுக்கூறிய குறைச்சொற் கிளவிகளே பிற எழுத்துக்களொடு கூடி உரிச்சொற்களாக முற்றி வரும் என உணர்த்துதலாகும். | "பெயரினும் வினையினும் மெய்தடுமாறும்" என்றது, பெயரியலுள் 'அவற்றுவழி மருங்கிற்றோன்றும்' (பெய-5.) எனப் பொதுப்படக்கூறிய இலக்கணம் உரிச்சொற்கண் இவ்வாறு அமையும் என அதனை விளக்கியவாறாம். மெய்தடுமாறல், இசை குறிப்பு பண்பு ஆகியவற்றிற்கும் ஒக்கும். | ஈண்டுத் "தத்தம் மரபின் சென்றுநிலை மருங்கின் எச்சொல் லாயினும்" என்றது, பெயர் வினைகட்கு முதனிலையாக வருபவை பெயர்ச்சொல்லாகவும் வினைச்சொல்லாகவும் வேறு பிரிந்து சென்றுவிடுதலின், தனித்தும், பெயர்வினைகட்கு அடையாயும் நிற்கும் உரிச்சொற்களையேயாம். உரிச்சொற்கள் பெயர்வினைகட்கு முதனிலையாயும் பெயர் போலவும் வினை போலவும், தனித்தும், அவற்றிற்கு அடையாயும் வந்து, இயற்சொல் முதலாய நால்வகைச் சொற்களாக நிற்குமாதலின் "எச்சொல் லாயினும்:" எனக் கூறினார். | ஒருசொல் பலபொருளையும் பல சொல் ஒரு பொருளையும் குறித்து வரும் திரிசொல் இலக்கணம், பெயர், வினை, இடை, உரி |
|
|