சொல்லாக்கத்திற்கும் சொற்றொடராக்கத்திற்கும் காரணமாக அமையும் ஓரெயெழுத்தொருமொழி முதலாய மூவகை மொழிகளையும் தொடராக்க அடிப்படையிற் பிரித்துணர இலக்கண நோக்கில் சொற்களைப் பெயர் வினை இடை உரி என்றும், பாட்டுஉரை நூல் முதலாய எழுவகைச் செய்யுளிடத்தும் அமைந்து பொருள் தரும் நோக்கில் இயற்சொல் திரிசொல் திசைச்சொல் வடசொல் என்றும் தொன்னூலோர் வழிநின்று தொல்காப்பியம் பாகுபாடு செய்துணர்த்துகின்றது. எழுவாயும் பயனிலையுமாக அமையும் தொடர்மொழியமைப்பின்கண் சொற்கள் இணைந்து பொருள்பயக்கும் நோக்கில் தொகைச்சொல், தொகைமொழி என இருவகைப்பாகுபாடுகளையும் அறிவிக்கின்றது. இவையெல்லாம், பொருளுணர்த்தும் முறைமையான் வெளிப்படைச்சொல், குறிப்புச்சொல் என இருகூறாக அடங்கும். அவைபற்றிய இன்றியமையாத குறிப்புக்கள் பின் வருமாறு. |
பொருள் பற்றியும், இடம் பற்றியும், குணம் பற்றியும், தொழில் பற்றியும் குறியீடாகவரும் பெயர்ச் சொற்களுள் இருதிணை ஐம்பால்களை வரையறுத்துணர்த்துவன மிகச் சில. ஏனையவை இருதிணைகட்கும் பொதுவாக நிற்கும். அதனான் பெயர்ச்சொற்களை உயர்திணைப் பெயர், அஃறிணைப் பெயர், இருதிணைப் பொதுப்பெயர் என மூவகையாக வகுத்துக் கொண்டு அவற்றின் இலக்கணத்தை விரித்துணர்த்துகின்றது தொல்காப்பியம். ஒருசார் பெயர்கள் இருதிணைக்கும் பொதுவாக நிற்கும் என்பதன்றிப் பொதுத்திணை என்று ஒன்றில்லை அதனால் அப் பொதுப்பெயர்கள் முன்னும் பின்னும் வரும் சிறப்புப்பெயர், சிறப்பு வினைகளான் இருதிணையுள் ஒன்றனுள் அடங்கிவிடும். |