சூ. 385 : | ஐயமும் கரிப்பும் ஆகலும் உரித்தே |
(88) |
உரை:மேற்கூறிய கடி என்னும் சொல் ஐயமும் கரிப்பும் ஆகிய பொருள்கட்காகி வருதலும் உரித்தாகும். ஐயம் குறிப்புரிச் சொல். கரிப்பு - பண்புரிச்சொல். எ-டு : 'கடுத்தனள் அல்லளோ அன்னை' எனவும் "கடிமிளகு தின்ற கல்லா மந்தி" எனவும் வரும். "கடா" என்பது இதனடியாகப் பிறந்த பெயராகும் (கடா-ஐயவினா). |
சூ. 386 : | ஐ வியப்பாகும் |
(89) |
உரை:ஐ என்னும் குறிப்புரிச்சொல் வியப்பென்னும் பொருட்காகி வரும். எ-டு : ஐதே காமம் யானே...(நற்-143) எனவரும். இது பெயர்ப்போலியாக வரும் |
சூ. 387 : | முனைவு முனிவாகும் |
(90) |
உரை:முனைவு என்னும் குறிப்புரிச் சொல் முனிதலென்னும் பொருட்காகி வரும். எ-டு : சேற்றுநிலை முனைஇய செங்கட் காரான் (அகம்-46) எனவரும். முனை - முன்னர் - முனைந்தான்-முற்பட்டான் எனவரும் பெயர்-வினைகள் வேறு. இது வேறு. |
சூ. 388 : | வையே கூர்மை |
(91) |
உரை:வை என்னும் குறிப்புரிச்சொல் கூர்மை என்னும் பொருள்பற்றி வரும். எ-டு : வைந்நுனைப்பகழி (முல்லை-73) எனவரும். இது பெயர்ப்போலியாக வரும். |
சூ. 389 : | எறுழ் வலியாகும் |
(92) |
உரை:எறுழ் என்னும் குறிப்புரிச் சொல் வலிமை என்னும் பொருட்காகிவரும். எ-டு : போரெறுழ் திணிதோள் (பெரும்பாண்-63) எனவரும். இது பெயர்ப்போலியாக வரும். |
சூ. 390 : | மெய்பெறக் கிளந்த உரிச்சொல் லெல்லாம் |
| முன்னும் பின்னும் வருபவை நாடி |
| ஒத்த மொழியாற் புணர்த்தனர் உணர்த்தல் |
| தத்தம் மரபிற் றோன்றுமன் பொருளே |
(93) |
க-து: | பயிலாதவற்றைப் பயின்றவை சார்த்தி.....எச்சொல்லாயினும் பொருள் வேறு கிளத்தல் (உரி-1) என்னும் நூற்பா உரிச் சொற்குப் பொருளுணர்த்துமாறு கூறிற்று. இச்சூத்திரம் ஓர் உரிச்சொல் பல பொருட்கும் பல உரிச்சொற்கள் ஒரு பொருட்கும் உரிமைபெற்று வருங்கால் அவ்உரிச்சொற்களை இருவகை வழக்கினும் ஒருவன் வழங்குமாறு கூறுகின்றது. |