உரை:குறிப்பினும் பண்பினும் இசையினும் தோன்றி நெறிப் படவாராக் குறைச் சொற்கிளவிகளை, எழுத்துக்களைக் கூட்டி முதனிலைச் சொல்லாக வடிவமைத்து இதுகாறும் கிளந்து ஓதப்பெற்ற உரிச்சொற்கள் எல்லாவற்றையும், கூறுவோன் அவற்றிற்கு முன்னும் பின்னும் வருவனவற்றை ஆ ராய்ந்து திரிபுபடாது பொருள் தருதற்கு ஒத்தமொழிகளொடு கூட்டி உணர்த்துக. அங்ஙனம் உணர்த்தின் கேட்போர்க்கு முறையானே தத்தம் பொருள் விளங்கித்தோன்றும். |
உணர்த்தும் முறைமையாவது: 'தட' என்னும் உரிச்சொல் பெருமை-கோட்டம் என்னும் பொருள்கட்கு உரியது. அவற்றுள் பெருமை என்னும் பொருளை உணர்த்தக்கருதின் தடந்தோள்வீரன், தடக்கை முருகன், தடமலை என்றும், கோட்டம் என்னும் பொருளை உணர்த்தக் கருதின். தடந்தாள் நாரை, தடமருப்பெருமை என்றும், பின்வரும் சொற்களைப் பொருந்த அமைத்தும் அவ்வாறே செல்லல் என்னும் சொல் தொழிற்பெயராயும், முன்னிலை வினையாயும் உரிச்சொல்லாயும் வருதலின் கருதிய பொருள் விளங்கித்தோன்ற, வள்ளியோர்பாற் செல்லல் நன்று என்றும், மதியாதார் முற்றம் மறந்தும் நீ செல்லல்! என்றும், மணங்கமழ் வியன்மார்பு அணங்கிய செல்லல் என்றும் முன்னும்பின்னும் பொருந்தும் சொற்களைக்கூட்டியும் உணர்த்தலாம். பிறவும் இவ்வாறே கூறல் வேண்டுமென்க. |