'பன்முறையானும் பரந்தன வரூஉம்' என்றும் அங்ஙனம் வரையறையின்றி வருதலின் "வரம்புதமக் கின்மையின்" என்றும் கூறினார். |
வழிநனி கடைப்பிடித்தலாவது; நெறிப்படவாராக் குறைச்சொற் கிளவி குறிப்பினும் பண்பினும் இசையினும் தோன்றி நிரம்பிப் பெயரினும் வினையினும் மெய்தடுமாறி ஒரு சொல் பல பொருட்கும் பலசொல் ஒரு பொருட்கும் உரிமைபெற்று நல்லிசைப் புலவோர்தம் வழக்கினுள் வருவனவற்றை முன்னும் பின்னும் வரும் சொற்களையும் 'சென்று நிலை மருங்கினையும்' அறிந்துணர்தலாம். |
ஓம்படையாணையாவது : 'பயிலாதவற்றைப் பயின்றவை சார்த்திப் பொருள் வேறு கிளத்தல்' எனவும், 'ஒத்தமொழியாற் புணர்த்தனர் உணர்த்தல்' எனவும் கூறியவற்றையாம். புலவர் என்றது தொன்னூலாசிரியன்மாரை. நிரம்பியும் நிரம்பாதும் வரும் உரிச்சொற்களின் முதனிலைகளே (வேர் அல்லது அடி) எல்லாச் சொற்களுக்கும் அடிமணையாதலின் உரிச்சொல்லின் அமைதியினையும் இயல்பினையும் பல்வேறு எடுத்துக் காட்டுக்களொடு இங்ஙனம் ஆசிரியர் விரித்து ஓதுவாராயினார். |
இவ்வியலிற் கூறப்பெற்ற இலக்கண நுண்மைகளையும் ஒண்மைகளையும் உரையாசிரியன்மாரும் இடைக்கால நூலாசிரியன்மாரும் ஓராமல் நெகிழவிட்டமையான் சொல்லாய்வு முறை திசைமாறிய தென்க. |
உரியியல் முற்றியது |
9. எச்சவியல் |
எச்சமாவது எஞ்சி நிற்கும் பொருள். அஃது ஈண்டுச் சொல்லிலக்கணம் பற்றி இது காறும் கூறியவற்றுள் எஞ்சிநின்ற இலக்கணமரபுகளை ஆகுபெயரான் உணர்த்தி நின்றது. |
அவையாவன : செய்யுளாக்கத்தின்கண் பெயர் முதலாய நால்வகைச் சொற்களும் பொருள்விளக்கும் முறைமையான் வேறு பெயர்பெற்று வழங்குமாறும் அவற்றின் இயல்புகளும் அவை செய்யுட்கண் கிடக்குங்கால் அவற்றை இயைத்துப் பொருள் காணுமாறும், தனிச் சொற்கள் இரண்டு முதலாகக் கூடித் தொகையாயும் அடுக்காயும் நின்று பொருள் உணர்த்துமாறும், |