இவைபற்றிய மரபுகளை ஆசிரியர் "வினைவேறு படூஉம் பலபொரு ளொருசொல்" முதலிய சூத்திரங்களான் கிளவியாக்கத்துள் விளங்க ஓதியுள்ளமை கண்டு கொள்க. |
சூ. 401 : | செந்தமிழ் சேர்ந்த பன்னிரு நிலத்தும் |
| தங்குறிப் பினவே திசைச்சொற் கிளவி |
(4) |
க-து : | திசைச்சொல் வருமாறு கூறுகின்றது. |
|
உரை:செய்யுட் சொல் நான்கனுள் திசைச்சொல் எனப்பட்ட சொற்களாவன செந்தமிழ் நிலத்தைச் சேர்ந்த ஏனைய பன்னிரண்டு நிலத்தும் தத்தங் குறிப்பினவாய் வழங்குவனவேயாம். |
அஃதாவது, அவ்வந்நிலத்து இயற்சொல்லாய் அமைந்து பிற நிலத்துள் திசைச்சொல்லாய் வழங்கும் என்றவாறு. நிலமக்கள் பெயர்ந்துறைதலன்றி நிலம் பெயர்தலின்றாகலின் திசைச்சொற்கள் அருகிவழங்கும் என்க. இக்காலத்தார் இதனை வட்டார வழக்கு எனக் கூறிக் கொள்வர். |
பன்னிருநிலம் இவை என்பது மேற் கூறப்பட்டது. ஆசிரியர் நூல் செய்த காலத்து வடவேங்கடம் தென்குமரி ஆயிடைக் கிடந்த தமிழ் கூறும் நல்லுலகம் இற்றைக்குச் செம்பாதி தமிழ் திரிந்து கன்னடமும் களிதெலுங்கும் கவின் மலையாளமும் துளுவும் பிறவுமாக மாறிக் கிடக்கின்றமையான் திசைச் சொற்களை வரையறுத்துக்கூறற்கு இயலாமையான் எடுத்துக்காட்டாக உரையாசிரியன்மார் காட்டினவற்றையே காட்டுதும். |
எ-டு : தென்பாண்டி நாட்டார் ஆவினையும் எருமையையும் 'பெற்றம்' என்றும், குட்டநாட்டார் 'தாயை'த் தள்ளை என்றும் குடநாட்டார் தந்தையை 'அச்சன்' என்றும் கற்கா நாட்டார் வஞ்சரைக், கையர் என்றும் சீதநாட்டார் ஏடா (எல்லா) என்பதனை எலுவன் என்றும் தோழியை இகுளை என்றும், தம் மாமி என்பதனைத் தந்துவை என்றும், பூழி நாட்டார் நாயினை ஞமலி என்றும் சிறுகுளத்தைப் 'பாழி' என்றும் அருவா நாட்டார் செய்யைச் செறுவென்றும் சிறுகுளத்தைக் கேணி என்றும், அருவாவடதலையார் குறுணியைக் குட்டை என்றும் வழங்குப. (நச்சினார்க்கினியர் உரை) அந்தோ - கரைய, சிக்க -குளிர செப்பு - பாண்டில் (எருது) கொக்கு (மாமரம்) என்பவற்றைப் பிற நாட்டுச் சொற்களாகக் காட்டுவார் தெய்வச்சிலையார். |