வட்டார மொழிகளையும் கலந்தே சமற்கிருதம் உருவாக்கப் பெற்றது. வட்டார மொழிகளைப் பிராகிருதம் என்பர். பிராகிருதம் என்பதற்கு இயற்கையானது முன்னையது என்பதும் பொருளாகும். பேரறிஞர்கூடித் திட்டமிட்டுப்படைக்க முற்பட்டபோது அஃது ஒலி எழுத்து முதலாகச், சொல், சொற்றொடர் சொற்புணர்ச்சி தொகைச் சொற்கள் யாப்பு முதலிய இலக்கண நெறிகள் ஈறாகச் சீர்மையாகவும் செம்மையாகவும் அமையத் தம்அறிவாற்றல் முழுமையும் பயன்படுத்தியமையின் இற்றைக்கும் அது மொழியியலாரான் பாராட்டப்பெறும் நிலையில் உள்ளது. |
பேரறிஞர் யாவரும் அங்ஙனம் உருவாக்கப்பட்ட அம்மொழியிலேயே பெரிதும் இலக்கியங்களைப் படைப்பாராயினர். அதுவே கல்விமொழியாகவும் கொள்ளப்படலாயிற்று. அதனான் வட்டார மொழிகள் படிப்படியாகத் திரிந்து பல்வேறு கிளை மொழிகளாயின. |
தமிழ்மொழி, சமற்கிருதம் உருவாவதற்கு முன்பே செம்மையுடையதாய் இலக்கிய இலக்கண வளமுடையதாக இருந்தமையானும் வண்புகழ் மூவரான் (சேர சோழ பாண்டியர்) போற்றிப் பேணப் பட்டமையானும் பெரிதும் திரிபுறாதது மட்டுமன்றி இலக்கண நெறிகளைச் செம்மைப்படுத்திப் பல்வேறு துறையிலக்கியங்களையும் படைத்துச் செழிப்புற்று வந்தது. |
அந்நிலையில் தொன்மையான பேச்சுவழக்குத் தமிழுக்கும் செம்மையான செய்யுள் வழக்குத் தமிழுக்கும் நேர்ந்து வரும் இடைவெளியைக் குறைத்துத் தமிழ்நெறி மரபினைக் காத்தல் வேண்டி "வடவேங்கடந் தென்குமரி யாயிடைத் தமிழ் கூறும் நல்லுலகத்து வழக்கும் செய்யுளும் ஆயிரு முதலின் எழுத்தும் சொல்லும் பொருளும் நாடிச் செந்தமி ழியற்கை சிவணிய நிலத்தொடு முந்துநூல் கண்டு" அவை ஓர் முறைப்பட எண்ணிப் பேரறிஞரும் ஐந்திரம் நிறைந்தவரும் அருளாளருமான தொல்காப்பியனாராற் றொகுத்து அமைக்கப்பட்டதே இத்தொல்காப்பியநூல். |
சமற்கிருதம் உருவாகத் தமிழ் பெரும்பங்கு அளித்துள்ளமையானும் தமிழ்ப்பேரறிஞர் பலர் துணை நின்றமையானும் அது தமிழர்க்கும் உரிமையுடையதாயிற்று. பல தமிழ் இலக்கியங்கள் சமற்கிருதமாக மொழி பெயர்க்கப்பட்டன. புதிய படைப்புக்கள் பல சமற்கிருதத்தில் செய்யப்பெற்றன. சமயம் தத்துவம் வானியல் கோளியல் முதலியவை சமற்கிருதத்தாலேயே |