சொல்லினக் கோட்பாடுகள்9

ஒழிந்த ஏனையவை வினைகாரணமாக வேறுபடுவன. அதனால் முற்றுவினை
இவ்வேற்றுமைப்   பொருள்களை  அடிப்படையாகக்   கொண்டு   நிற்கும்.
இதனை,
 

வினையே செய்வது செயப்படு பொருளே
நிலனே காலம் கருவி யென்றா
இன்னதற்கு இதுபய னாக என்னும்
அன்ன மரபின் இரண்டொடுந் தொகைஇ
ஆயெட் டென்ப தொழில்முதன் நிலையே

(வேற்றுமை மயங்கியல்-29)
 

எனத் தொல்காப்பியம் புலப்படுத்துகின்றது.
 

1) முதல் வேற்றுமை:என்பது  எண்ணான்  எய்திய  பெயர்.  பெயர்
வேற்றுமை என்பது உருபான் எய்திய பெயர். எழுவாய் வேற்றுமை என்பது
பொருளான் எய்திய பெயர். இது வினையையும் பெயரையும் பயனிலையாகக்
கொண்டு முடியும். இது தனிச் சொல்லாயும் தொகைச் சொல்லாயும் தொகை
மொழியாயும்  வரும்.  இப்பெயர்வேற்றுமையே  ஏனைய  வேற்றுமைகளை
எய்தும். எய்துங்கால் அவ்வவ்வுருபுகளை ஏற்கும்.
 

2) இரண்டாம் வேற்றுமை:என்பது  எண்ணான்   அமைந்த  பெயர்.
ஐகார  வேற்றுமை  என்பது  உருபானமைந்த  பெயர்.  செயப்படுபொருள்
வேற்றுமை  என்பது  பொருளானமைந்த பெயர். இதனை "எவ்வழி வரினும்
வினையே  வினைக்குறிப்பு  அவ்விரு   முதலிற்   றோன்றும்"   என்பார்
ஆசிரியர்.
 

3) மூன்றாம் வேற்றுமை: என்பது   எண்ணான்    வருபெயர்.   ஒடு
வேற்றுமை   என்பது   உருபான்வருபெயர்.   கருவிவேற்றுமை   என்பது
பொருளான்வருபெயர்.   கருவி,    காரணம்,    ஏது    என்பவை   ஒரு
பொருட்கிளவிகள்.  எனினும்  தம்முள்  சிறிது  வேறுபாடுடையவையாகும்.
அதனான்  ஏதுப்பற்றி  வரும்  மூன்றாம்  வேற்றுமை இன் ஆன் என்னும்
சொல்லுருபுகளை  மாற்றுருபாகப் பெற்றுவரும் என்கின்றது தொல்காப்பியம்.
இதனை  "இன்ஆன்  ஏது  ஈங்கென வரூஉம் அன்ன பிறவும் அதன்பால"
என்று விளக்குகின்றது.
 

தமிழ்  இலக்கணத்திற்கு  வடமொழி  இலக்கணமே  வழிகாட்டி என்றும்
மூலம்  என்றும்  பிழையாக உணர்ந்த இடைக்காலத்தாரும் உரையாசிரியன்
மாரும்   தமிழ்மரபையும்  தொல்காப்பிய   நெறியையும்  நடுவுநிலையொடு
நோக்காமால்  மூன்றாம் வேற்றுமைக்கு மூன்று பொருள் உண்டு எனக்கூறிச்
சென்றனர். ஆசிரியர் அது வினை