22சொல்லினக் கோட்பாடுகள்

எச்சம்:அறிவும் உணர்வுமுடையராகிய மக்கள் தம்முள் கருத்துக்களைப்
பரிமாற்றிக் கொள்ளுமிடத்தும் நுண்ணிதாக  உணர்த்துமிடத்தும் கூறப்படும்
கருத்துக்களை எல்லாம்  அவற்றிற்குரிய சொற்களான் விரித்துரையாமற் சில
கூறி   அவற்றான்   எஞ்சியவற்றை    உணருமாறு  செய்வர்.  அங்ஙனம்
கூறப்பெறாது உணருமாறு எஞ்சிநிற்கும் சொல்லும் சொற்களும் எச்சமாகும்.
 

அவ்  எச்சங்களைப்   பத்துவகையாகப்  பிரித்துணர்த்துகின்றது தொல்
காப்பியம்.   ஒரு    சொல்     அல்லது     சொற்றொடர்    எச்சமாகி
நிற்குங்கால் - பிறிது - ஒருசொல்லை -  சொற்களை     அவாவிநிற்பதும்,
கருத்துக்களை அவாவிநிற்பதும் என இருதிறத்தான்  அவை  எஞ்சிநிற்கும்.
பிரிநிலைஎச்சம்,       வினையெச்சம்,     பெயரெச்சம்,  ஒழியிசைஎச்சம்,
எதிர்மறைஎச்சம்,  உம்மைஎச்சம்,  எனவென்எச்சம், சொல்எச்சம் ஆயவை
சொற்களை எச்சமாகக் கொண்டு முடிபவை. குறிப்பெச்சமும் இசையெச்சமும்
கருத்துக்களை  எச்சமாகக்  கொண்டு விளக்குபவை. இவற்றின் இயல்புகளை
எச்சவியலுரையுட்  கண்டு  கொள்க.  வேர்ச்சொல்  பற்றியும்,  முதனிலைச்
சொல்பற்றியும் உரியியலுரையுள் கண்டுகொள்க.