24கிளவியாக்கம்

'கிளவி'   என்பதற்கு  நாவினின்றும்  கிளத்தலை  உடையது  என்பது
பொருள்.    'கிள்'     என்னும்        முதனிலைத்      தொழிற்பெயர்
ஏவற்பொருளுணர்த்தும் அகரத்தொடு  கூடிக்  "கிள"  என்றாகிப்  பின்னர்
உடைமைப்பொருள்   தரும்.  'இ'  என்னும்  இறுதி  இடைச்சொல்பெற்றுக்
"கிளவி" என நின்றது.
   

இச்சொல்     சகரக்கிளவி,    வகரக்கிளவி    என     எழுத்தையும்
உரையசைக்கிளவி, மாரைக்கிளவி என அசையையும், பெயர்  நிலைக்கிளவி,
வினையெஞ்சுகிளவி       எனச்     சொல்லையும்,     இருநான்குகிளவி,
தொல்லோர்கிளவி  எனச்  சொற்றொடரையும்  குறித்து  வரும்.  ஆதலின்
ஈண்டு அது தனிமொழி,  தொகைமொழி,  தொடர்மொழிகட்குப் பொதுவாக
நின்றது.
   

ஆக்கம்-ஆக்கிக்கொள்ளுதல்.  அஃதாவது ஒரு பெயரிலிருந்து ஐம்பாற்
சொற்களைப் படைத்துக்  கோடல். "செயற்கைப்  பொருளை  ஆக்கமொடு
கூறல்" (கிளவி-20) என்றதனான் அறிக.
   

இவ்வியலுள் "னஃகான்  ஒற்றே  ஆடூஉ வறிசொல்" என்பது முதலாகச்
சொற்களை ஆக்கிக் கொள்ளுமாறும். "வினையிற்றோன்றும் பாலறி கிளவி....
மயங்கல்  கூடா" (கிளவி-11) என்பது முதலாகத்  தொடர்களை  வழுவின்றி
அமைத்துக்கொள்ளுமாறும்  கூறலின்  இது   கிளவியாக்கம்   எனப்பெயர்
பெற்றது.
   

இச்சொல்  ஆ (ஆதல்) என்னும்  முதனிலையடியாகப்  பிறந்த  'ஆகு'
என்னும் ஏவல்வினை 'ஆக்கு' என்னும் பிறவினையாகிப் பின்னர்ப் பண்புப்
பொருள்தரும்  அம்  என்னும்  இறுதி  இடைச்சொல்பெற்று 'ஆக்கம்' என
நின்றது.
   

யாதானும்  ஒரு  சொல்லை  இருதிணை  ஐம்பாலுள்  ஒன்றற்குரியதாக
ஆக்கிக்கொள்ளுதலும்,  செப்பும்  வினாவுமாக  வரும்  தொடர்மொழிகளை
வழுவின்றி   ஆக்கிக்கொள்ளுதலும்    ஈண்டு   ஆக்கமாம்.    சொற்கள
தொடருங்கால்  பயனிலையும்,   தொகை  நிலையும் எண்ணு நிலையுமாகத்
தொடரும்.  அவை  இயைபும்  தகுதியுமாகக்  தொடரின்  வழாநிலையாம்.
இயைபின்றித்   தொடரின்  வழுவாம்.    இலக்கணவரையறையிற்   சிறிது
பிறழ்ந்துவரினும்   சான்றோர்  வழக்காய்ப்  பொருள்உணர்ச்சி  திரியாமல்
மரபாகவருவனவற்றை வழாநிலையாக மேற்கொள்ளுதலும் ஆக்கமாம்.