இனி, இவற்றிற்குப் பண்டை உரையாசிரியன்மாரும் இக்கால ஆய்வாளரும் கூறியுள்ள விளக்கங்களுள் தமிழ் மரபிற்கும் தொல்காப்பியநெறிக்கும் ஒத்தனவும் ஒவ்வாதனவும்பற்றி விளக்கப்புகின் உரை மிகவிரியுமாகலின் அவை அகல உரையுள் ஆராய்ந்து கூறப்பெறும். |
சொற்கள் பொருள்கள்மேலாமாறு உணர்த்தினமையின் கிளவியாக்கம் எனப்பட்டதென்பார் ஒரு சாரார். பிற இயல்களிற்கூறப்பெறுவனவும் பொருள்மேலாமாறே கூறுதலின் அதுபொருந்தாமையறிக. வழுக்களைந்து சொற்களை அமைத்துக்கோடல் என்பார் ஒருதிறத்தார். வழுவை நீக்கிக்கொள்ளுதல் இலக்கணமுறைமையாதலன்றி ஆக்கம் (படைப்பு) ஆகாமையின் அதுவும் ஒவ்வுமாறில்லை என்க. |
இயற்கையாகிய 'ஓசை' ஒலிகளைக்கொண்டு செயற்கையாகச் சொற்களையும் தொடர்களையும் மக்கள் ஆக்கிக்கொண்டமையின் மொழி என்பது மக்கள் ஆக்கப்பொருளாம். அங்ஙனம் முன்னோர்கள் ஆக்கி மேற்கொண்ட நிலைமையைச்சுட்டி அம்மரபானே சொற்களை ஆக்கிக்கொள்ள வேண்டிய முறைமையைக் கூறுதலே இவ்வியலின் நோக்கமாம். |
எழுத்தியலைத் தொடங்குங்கால் ஆசிரியர் அதனை எழுத்தாக்கம். எனக் கூறாமல் 'நூன்மரபு' என்றும் சொல்லியலைத் தொடங்குங்கால் சொல்மரபு என்னாமல் 'கிளவியாக்கம்' என்றும் அமைத்துக்கூறிய அறிவியல் நுண்மையை ஓர்ந்துதெளிக. |
நூல் |
க. கிளவியாக்கம் |
சூத்திரம் 1 : |
உயர்திணை என்மனார் மக்கட் சுட்டே |
அஃறிணை என்மனார் அவரல பிறவே |
ஆயிரு திணையின் இசைக்குமன சொல்லே. |
[1] |
கருத்து : சொல்லின் தோற்றத்திற்குரிய அடிப்படையைச்சுட்டி அவ்வாற்றான அதுவகைப்பட்டு நிகழுமாறு கூறுகின்றது. |
உரை :- மக்களாகிய கருத்து நிலைபெறும் பொருளை உயர்திணை என்று கூறுவர் தொல்லாசிரியர்; மக்கட் சுட்டுடையரல்லாத பொருளையும் பிறபொருளையும் உயர்வல்லாதனவாகிய திணை என்று கூறுவர். அங்ஙனம் அவர்கூறும் அவ்இரு திணைப்பொருள்கள்மேலும் நிலைபேறுடையவாகிய சொற்கள் தோன்றி இசைக்கும். |