சொல்லதிகாரம் - கல்லாடனார் விருத்தியுரை

89

ஓம்படைப் பொருளில் இரண்டாவதும் மூன்றாவதும்
மயங்கல்
 

99.

1ஓம்படைக் கிளவிக் கையும் ஆனும்
தாம்பிரி விலவே
2 தொகவரு காலை.
 

என் - எனின், இதுவும் இரண்டாவதும் மூன்றாவதும் ஒத்தவுரிமைய
தொகைக்கண் வரும் காலத்து, (எ - று.)

(எ - டு.) புலிபோற்றிவா,   வாழியைய  என்பன.  இவை  புலியைப்
போற்றிவா  எனவும்,  புலியால்  போற்றிவா எனவும் விரியும் என்பது.
புலி என்றது புலியான் வரும் ஏதத்தினை.

ஓம்படை யென்பது    போற்றுதல்,    ஈண்டும்     இரண்டாவது
செயப்படுபொருளோடு ஏதுப்பொருள் படுகின்றது போலும்.

தொகவருகாலை என்றதனால்   இவ்வேற்றுமை   மயக்கமெல்லாம்
தொக்குழியே மயங்கு மென்பது கொள்ளப்பட்டது.

முன்னே     ஆனுருபினோடு இன்னுருபும் ஏதுப்  பொருட்டாகும்
என்றோதப்  பட்டமையின்,  ஒன்றின முடித்தல் என்பதனான் புலியிற்
போற்றிவா என ஐந்தாவது கொள்க.                        (14)

வாழ்ச்சிக் கிழமையில் ஆறாவதும் ஏழாவதும்
மயங்கல்
 

100.

ஆறன் மருங்கின் வாழ்ச்சிக் கிழமைக்(கு)
ஏழும் ஆகும் உறைநிலத் தான.
 

என் - எனின்,    ஆறாவதனோடு    ஏழாவதும்    மயங்குமாறு
உணர்த்துதல் நுதலிற்று.

(இ - ள்.) ஆறாவதனிடத்து   வாழ்ச்சி   யென்னும்  உரிமைக்கு
ஏழாவதும் ஆகும். யாண்டோ எனின், ஆண்டு அஃதுறைநிலத்துக்கண்,
(எ - று.)

(எ - டு.) காட்டு  யானை,  காட்டதுயானை, காட்டின்கண் யானை
என விரியும்.

உறை     நிலத்தான  என்றதனால்  உறையா  நில   மாயக்கால்
ஆறாவதன்கண்  வந்ததாகாது ஏழாவதுதானே யாம் என்றவாறு. அஃது
ஊருள்  யானையாய்க்  காட்டுள்  மேய விட்டதனைக் காட்டு யானை
யென்னும் வழிக் கொள்க.


இந்நூற்பாவிற்குப் பொருள் காணப்படவில்லை.

2 ‘தொகை வருகாலை’  என்பது   இளம்பூரணர்,  சேனாவரையர்,
தெய்வச்    சிலையார்   ஆகியோரது   பாடம்.  இவரது   பாடமும்
நச்சினார்க்கினயரது பாடமும் ஒன்றே.