சொல்லதிகாரம் - கல்லாடனார் விருத்தியுரை

153

மேல்    வினைக்குறிப்புக் கூறுழிக் கூறுக எனின், ஆண்டுக் கூறுவன
போலாது இஃது ஈறுதிரியாது தானொன்றே  மூன்றுபாற்கும்  உரித்தாயின
மையின் வேறு கூறினார் எனக்கொள்க.                        (13)

செய்யுட்கண் சில வினையீறுகள் ஓகாரமாதல்
 

214.

பாலறி மரபின் அம்மூ வீற்றும்
ஆவோ ஆகும் செய்யு ளுள்ளே.
 

என் - எனின்,   அவ்விருபத்து   மூன்று   ஈற்றுள்ளும் மூன்றற்குச்
செய்யுளகத்துப் பிறப்பதோர் திரிபு கூறுதல் நுதலிற்று.  

(இ - ள்.)   பால்  அறியப்படும்   மரபினையுடை  அம்மூன்றீற்றின்
கண்ணும்  ஆகாரம்  ஓகாரமாம்  செய்யுளிடத்து,  (எ - று.)

அம்மூன்றாவன,  மேல்  ‘ஆ ஓ ஆகும்’ என்றமையால் ஆன், ஆள்,
ஆர் எனக் கொள்க.  

(இ - ள்.) “வினவி  நிற்றந்தோனே”,  “நல்லை  மன்னென நகூஉப்
பெயர்ந்தோளே”, “சென்றோ ரன்பிலர் தோழி” எனவரும்.  

இம்     மூன்றும்     படுத்தலோசையால்     தொழிற்பெயராயவழி
ஆவோவாதல் பெயரியலுட் 1கொள்ளப்படும்.                   (14)

ஆய்என் கிளவியிலுள்ள ஆகார ஈறும் ஓகாரமாகும் எனல்
 

215.

ஆயென் கிளவியும் 2அவற்றோ ரன்ன.
 

என் - எனின்,   இஃது  மேலதன்  முடிபு  முடிதலுடையது  பிறதும்
உண்டென்பதும் உணர்த்துதல் நுதலிற்று.  

(இ - ள்.) ஆய்  என்னும்  ஈற்றுச்  சொல்லும் மேற்சொல்லப் பட்ட
மூன்றீற்றினோடும் ஆகாரம் ஓகாரமாதல் கொள்ளப்படும், (எ - று.)  

(எ - டு.) “வந்தாய்  மன்ற  தெண்கடற்  சேர்ப்ப”  எனவரும்  

இது    விரவு  வினையுள்   உள்ள  தாகலான்,  ஈண்டுக்  கூறியது
என்னையெனின்,     விரவே      எனினும்     இவ்வாறு    திரிவது
உயர்திணையின்மேல்      வந்ததாகலானும்,      ஆ    ஓ    ஆதல்
அதிகாரப்பட்டமையானும்  எனக்கொள்க.                      (15)


1.பெயரியல் - 41ஆம் நூற்பா.

2.‘அவற்றொடு   கொள்ளும்’   என்பது   பிற   உரையாசிரியர்கள்
கொண்ட  பாடம்.  சில  ஏடுகளில் கல்லாடருக்கும்  இதுவே பாடமாகக்
காணப்படுகின்றது.