பின் என்பது பின்னரென்றும், பின்னை என்றும் வரும். முன் என்பது முன்னரென்றும் முன்னை என்றும் வரும். இனிப் பின் என்பதும் முன் என்பதும் ஒருவினையிடத்து வாராது பிற்கொண்டான், முற்கொண்டான் எனத் தாமேயும் வரும். கால் :- 1 “வலனாக வினையென்று வணங்கிநாம் விடுத்தக்கால்” எனவரும். கடை:- 2 ‘‘தொடர் கூரத் துவ்வாமை வந்தக்கடை” எனவரும். வழி :- 3 “படுசுடர் மாலையொடு பைதனோ யுழப்பாளைக் குடிபுறங் காத்தோம்புஞ் செங்கோலான் வியன்றானை விடுவழி விடுவழிச் சென்றாங் கவர் தொடுவழித் தொடுவழி நீங்கின்றாற் பசப்பே” எனவரும். இடத்து :- 4 “களையுநர் கைகொல்லுங் காழ்த்த விடத்து” எனவரும். இவை காலம் விளக்கி நில்லாது குறிப்பாதலிற்போலுங் ‘காலங்கண்ணிய’ என்றது. இவையிற் குறிப்புப் போலாது ஓரோர் காலங்களைக் குறித்துக்கொள்ள நிற்கும் என்பது. விடுத்தக்கால் என்பது விடுத்து என இறந்தகாலக் குறிப்பாயிற்று. “வாரி வளங்குன்றிக்கால்” (குறள் - 14) என்பது குன்றின் என எதிர்காலக் குறிப்பாயிற்று. முன் செய்து, செய்யூ என்ற வாய்பாடு தம்மையே ஓதினவாறு போலன்றி ஈ்ண்டு அன், ஆள், அர், ஆர் என்றாற்போல அவற்றை ஈறு பற்றி ஓதினார் எனக் கொள்க. மற்று இக்காட்டிய உதாரணங்களெல்லாம் பெயரெச்சமும் பெயரு மாகற்பால எனின், அவற்றின் பொருள் நோக்குஞ் சொல்நிலையுஞ் சந்தி நிலைமையும் அன்னவன்மையின் இவ்வாறு வருவனவற்றை வினையெச்சமென்கின்றார்போலும். ஆயினும் இவை செய்த செய்யாநின்ற செய்யும் என்னும் பெயரெச்சங்களும் இவற்றின் மறைகளும் இவற்றின் தொகையாகிய வாய்பாடும் போலும் வாய்பாடுகளை யடைந்தல்லது வாரா வென்பது.
1. கலி. 35: 15. 2. கலி. 22: 21 3. கலி. 130: 18-22 4. குறள், 879 |