சொல்லதிகாரம் - கல்லாடனார் விருத்தியுரை

193

எ. இடையியல்

இடைச்சொற்குரிய பொது விலக்கணம்
 

251.

1 இடையெனப் படுப பெயரொடும் வினையொடும்
நடைபெற் றியலும் தமக்கியல் பிலவே.
 

இவ்வோத்து என்னை பெயர்த்தோ எனின், இடைச்சொல்லிலக்கணம்
உணர்த்துதலான் இடைச்சொல்லோத்து என்னும் பெயர்த்து.

இடைச்சொல்  என்னும் பொருண்மை   என்னை  யெனின், பெயர்
வினைகள்  உணர்த்தும்  பொருட்குத்   தான்   இடமாக   நிற்றலான்
இடைச்சொல்லாயிற்று.

இச்சூத்திரம் என்னுதலிற்றோ   எனின்,   இடைச்   சொற்கெல்லாம்
பொதுவாயதோர் இலக்கணம் உணர்த்துதல் நுதலிற்று.

(இ -  ள்.)  இடைச்சொல்  என்று    சொல்லப்படுவன   பெயர்ச்
சொல்லோடும்   வினைச்சொல்லோடும்    வழக்குப்பெற்று   நடக்கும்;
அவ்வாறு  அவற்றொடு  நடத்தலல்லது  தாமாக  நடக்கும்  இயல்பில,
(எ -று.)

(எ - டு.)  அது மன், வருகதில் அம்ம எனவரும்.

தமக்கியல்பில     என்றதனான்     பெயரோடும்   வினையொடும்
அவ்விடைச்  சொற்கள்  வருவழிச்   சொற்புறத்துவழி   வருதலும், அச்
சொல்வழி வருதலும் என இருவகைத் தென்பது பெறப்பட்டது.

(எ - டு.)  வருகதில்,  உண்டான் எனவரும்; இவை வினை. அதுமன்
மற்றையது எனவரும் : இவை பெயர்.

மற்று      இச்சூத்திரத்தின்     பொருண்மையும்,       இலேசின்
பொருண்மையும்  “இடைச்சொல்    கிளவியும்,  உரிச்சொல்  கிளவியும்”
என்ற சூத்திரத்துள்ளும் அதன்  இலேசினுள்ளும்  அடங்குமால்  எனின்,
அது  நிரனிறை  வாய்பாட்டதாகலாற்   பெயரெனப்பட்டு  வருமென்றும்
வினையோடு  உரிவருமென்றும்     கொள்ளக் கிடந்தமையின், இடையும்
இரண்டோடும் வருமென்றற்குக் கூறினார் என்பது.

இனி அவ்விலேசு நிரனிறைச் சூத்திரத்தாகலாற் புறத்துவழி   வருதல்
இடைச்    சொற்காகவும்,    உள்வழி   வருதல்     உரிச்சொற்காகவுங்
கொள்ளக்கிடக்கும் என்பது  கருதி,  ஈண்டும்   இருவகையாலும்  இடை
வரும் என்பதற்கு இலேசு கூறினார் போலும்.                    (1)


1. ‘இடையெனப்படுவ’  என்பது  தெய்வச்சிலையார்,  சேனாவரையர்
பாடம்.