வினைச்சொற்கள் பால்காட்டி வருவன வினையியலுள், ‘அம் ஆம் முதலாக’ஈறுபத்தி ஓதினவெல்லாம் எனக் கொள்க. இனி அவ்வினைச் சொற்கள் ‘காலமொடு வருநவும்’ என்றதனால் காலங்காட்டி வருவன உண்டான் என்புழி இடைக்கண் டகரமும், உண்ணாநின்றான் என்புழி ஆ நின்றும், உண்பான் என்புழிப் பகரமும் அத் தன்மைய பிறவும் எனக்கொள்க. காலம் உணர்த்தி வருதலான் அவை காலம் எனப்பட்டன. உண்டான் என்புழிக் காலங்காட்டும் டகரத்துடனே பால் காட்டும் ஆன் வந்தவாறு அறிக. இவ்வாறு பாலும் காலமும் காட்டுவன வினைக்கென்றோதினும் அதனைப் பெரும்பான்மையாக்கி உண்டவன் என்றாற்போலப் பெயர்க்குங் கொள்க. இனி ஒன்றென முடித்தல் என்பதனால் வினைச்சொற்கண் பாலுணர்த்துவனவேயன்றிப் பெயர்க்கே உரிய வாய்பாட்டால் உணர்த்துவனவுங் கொள்ளப்படும். அவை நம்பி, நங்கை என்னும் இகர ஐகார ஈறுபோல்வன எனக்கொள்க. வேற்றுமை யுருபாய் வருவன வேற்றுமை யோத்தினுள் ‘அவைதாம் பெயர் ஐ ஒடு கு’ என்னும் சூத்திரத்துப் பெயர் ஒழிந்த ஏழும் எனக் கொள்க. இவற்றை ஓத்து அடைவுபற்றி முன் கூறாதது, வினைக்கண் வருவன பெரும்பான்மையாகல் பற்றிப் போலும். மற்றை அசைநிலையும், இசைநிறையும், குறிப்பிற் பொருள்செய்குநவும் இவ்வோத்தினுள் தத்தம் சிறப்புச் சூத்திரத்துள்ளே உதாரணங் காட்டப்படும். ஒப்பில் வழியாற் பொருள் செய்குநவற்றிற்கு உதாரணம் இதன் பின்னதிகாரத்து உவமையியலுள் காணப்படும். இச்சூத்திரத்து முன்னைய மூன்றும் முன்னர் ஓதிப் போந்தனவாகலாள் முன் வைக்கப்பட்டன. பின்னையது பின்னதிகராத்துக் கூறலால் பின் வைக்கப்பட்டது. இடையன இவ்வோத்தினுள் கூறப்படுதலான் இடைநின்றன. ஆயின் இடைக்கணின்ற மூன்றனுள்ளும் பொருள் செய்வதனை முன் சொல்லாது அசைநிலை இசைநிறைகளை முன் சொல்லியது என்னை எனின், இவை இரண்டும் ஒழிய ஈற்றின் முன்னும் பின்னும் நின்றவையெல்லாம் பெரும்பான்மையினவாய் நிற்றலானும், அவைதாம் இவையாய் நிற்றலானும், இவைதாம் அவையாய் நிற்றல் சிறுபான்மையாகலானும் என்பது. (2) |