சொல்லதிகாரம் - கல்லாடனார் விருத்தியுரை

199

இனி  ஆக்கம் - நெடியனும்   வலியனுமாயினான்  என்பது. இஃது
எண்ணன்றோவெனின்,      ஒருபொருடன்னையே      சொல்லுதலின்
அன்றாயிற்றுப் போலும்.

மற்றும் இதனகத்து விகற்பமெல்லாம் அறிந்து கொள்க.         (7)

‘ஓ’ என்னும் இடைச்சொல்லின் பொருள்
 

258. பிரிநிலை வினாவே யெதிர்மறை ஒழியிசை
தெரிநிலைக் கிளவி சிறப்பொடு தொகைஇ
இருமூன் றென்ப ஓகர ரம்மே.
 

என் - எனின், இதுவும் அது.

(இ - ள்.)    பிரிநிலைப்பொருண்மை,        வினாப்பொருண்மை,
எதிர்மறைப்பொருண்மை,    ஒழியிசைப்   பொருண்மை,   தெரிநிலைப்
பொருண்மை  என  இவற்றைச்  சிறப்புப் பொருண்மையோடு தொகுத்து
ஆறு என்று சொல்லுப ஆசிரியர் ஓகாரத்துப் பொருண்மை, (எ - று.)

(எ - டு.)  பிரிநிலை  -  அவனோ  கொண்டான்  என்பது.  இஃது
இப்போது வினாவாய் நடக்கின்றதென உணர்க.

இனி வினா - அவனோ அல்லனோ,
இனி எதிர்மறை - யானோகொள்வேன் என்பது.
இனி ஒழியிசை - கொளலோ கொண்டான் என்பது.
இனித் தெரிநிலை - நன்றோவன்று தீதோவன்று என்பது.
இனிச் சிறப்பு - ஓபெரிது என்பது.                         (8)

‘ஏ’ என்னும் இடைச்சொல்லின் பொருள்
 

259.

தேற்றம் வினாவே பிரிநிலை எண்ணே
ஈற்றசை யிவ்வைத் தேகா ரம்மே.
 

என்   -   எனின்,  இது   பெரும்பான்மை   பொருள்  படுமாறும்
சிறுபான்மை யசைநிலையாமாறும் உணர்த்துதல் நுதலிற்று.

(இ - ள்)  தேற்றப் பொருண்மை,  வினாப்பொருண்மை, பிரிநிலைப்
பொருண்மை,    எண்ணுப்    பொருண்மை,   ஈற்றசையாதல்     என
இவ்வகைந்து வகைப்படும் ஏகாரம், (எ - று.)

(எ - டு.)  தேற்றம் - அவனே கொண்டான்.