சொல்லதிகாரம் - கல்லாடனார் விருத்தியுரை

10

(இ - ள்)  ஆடூஉ  வறியுஞ்  சொல்லாவது  னகாரமாகிய  ஒற்றினை
யீறாகவுடைய சொல், (எ - று.)

(எ - டு) உண்டான்,    உண்ணா    நின்றான்,  உண்பான்:  இவை
தெரிநிலை வினை. கரியன், செய்யன் : இவை குறிப்புவினை.

சூத்திரம் ‘னஃகா  னொற்றே  யாடூஉ  வறிசொல்’ எனப் பொதுப்பட
நின்றமையின்  புதன்,   குபேரன்,  உண்டேன்,  உண்மின்  என்பனவும்
ஆண்பா  லுணர்த்துதற்குச்   சென்றவேனும்,  பொதுமைவிலக்கி   மேற்
சொல்லுகின்ற  விதிகளாற் படர்க்கை  யிடத்து  முற்றுச் சொற்கீறாயல்லது
வாராதெனக் கொள்க. இது மேற்கூறுவனவற்றிற்கும் ஒக்கும்.

உண்டான் என்புழி   நான்கெழுத்துக்கூடி    ஆண்பாலுணர்த்திற்றே
யாயினும்,  பிறவெழுத்துக்கள்  பிறபாலுணர்த்தும்   வழியும்  வருதலான்
னகர ஒற்றையே தலைமைபற்றி ஆடூஉ அறிசொல் என்றார்.        (5)

பெண்பால் ஈறு
 

6.

ளஃகான் ஒற்றே மகடூஉ வறிசொல்.
 

என் - எனின் மகடூஉவறிசொல்லாமாறு உணர்த்துதல் நுதலிற்று.

(இ - ள்) மகடூஉவினை யறியும் சொல்லாவது ளகாரமாகிய ஒற்றினை
யீறாகவுடைய சொல், (எ - று.)

(எ - டு.) உண்டாள்,   உண்ணாநின்றாள்,      உண்பாள்:   இவை
தெரிநிலைவினை, கரியள், செய்யள் : இவை  குறிப்புவினை ;  வேறுபாடு
அறிந்து கொள்க.

இனி   முற்சூத்திரத்துரையில் விரிந்தாங்கு ‘னஃகா னொற்றெ ஆடூஉ
வறிசொல் எனச் சூத்திரம் பொதுப்பட நின்றமையின்’ என்று  தொடங்கி
உரைத்தவைகளெல்லாம் ஈண்டும் விரிந்துரைத்துக்கொள்க.          (6)

பலர்பால் ஈறு
 

7.
  

ரஃகான் ஒற்றும் பகர இறுதியும்
மாரைக் கிளவி
1 உளப்பட மூன்றும்

நேரத் தோன்றும் பலரறி சொல்லே.
 

என் - எனின் பலரை யறியுஞ் சொல்லாமாறுணர்த்துதல் நுதலிற்று.

(இ - ள்.) ரஃகானாகிய ஒற்றும், பகரமாகிய  விறுதியும், மாரென்னும்
சொல்லுட்பட   இம்மூன்றும்  நிரம்பத்தோன்றும்  பலரையறியும் சொற்கு,
(எ - று.)


1உட்பட என்பதும் பாடம்.