சொல்லதிகாரம் - கல்லாடனார் விருத்தியுரை

40

இனி இரட்டுற  மொழிதல்  என்னும்  ஞாபகத்தால் ஒரு பொருளைக்
கருதிய  வேறு  வேறாகிய  பெயர்ச்  சொற்கள்  வேற்றுத்  தொழிலைப்
பெயர் தோறுஞ் சொல்லின் ஒரு பொருட்குப்  பொருந்தும் இடமில என
வேறல்லாத   ஒரு   தொழிலைப்    பெயர்தோறுஞ்  சொல்லின்   ஒரு
பொருட்குப் பொருந்தும் இடனுடையதூஉங் கொள்ளப்படும்.

(எ - டு.)  ஆசிரியன்     வந்தான்,     பேரூர்கிழான்   வந்தான்,
செயிற்றியன்  வந்தான்,  இளங்கண்ணன்  வந்தான்,  சாத்தன்  வந்தான்
எனவரும்.

இதனாற் சொல்லியது  ஒரு  பொருள்மேல்  வரும்  பல பெயர்க்கண்
மரபிலக்கணமும் மரபு  வழுவமைதியுங்  கூறியவாறாயிற்று.  ஞாபகத்தான்
கொண்டது  மரபு  வழுவமைதி.   அதனை   வழூஉவென்றது  என்னை
யெனின்  ஒருநிலைக்கண்  அதுதானே பல  பொருள்மேலுஞ்  சேறலான்
என்பது.                                                 (42)

எண்ணின் கண்வரும் திணைவழுவமைதி
 

43.

தன்மைச் சொல்லே அஃறிணைக் கிளவியென்
றெண்ணுவழி மருங்கின் விரவுதல் வரையார்.

 

என்   -   எனின்     எண்ணின்கண்   திணைவழு   வமையுமாறு
உணர்த்துதல்நுதலிற்று.

(இ - ள்.)  தன்மையாகிய     சொல்லினையும்    அஃறிணையாகிய
சொல்லினையும்  விரவி   யெண்ணுமிடத்து  உண்டாகிய  திணைவிராய்
வருதலை நீக்கார் கொள்வர் ஆசிரியர், (எ - று.)

என்று என்றது எண்ணசை.

(எ - டு.)   “யானும்    என்  னெஃகமுஞ்  சாறும்”  “அவனுடைய
யானைக்குஞ் சேனைக்கும் போர்” என வரும்.

இதனுள்  அவன்  வந்தது  என்றாற்  போலும்  திணை வழுவில்லை
யெனின்.   அதுவேயல்ல,   திணைவழூஉ    எண்ணுமிடத்தும்    இன
மொத்தனவே    எண்ணுக    என     முன்     சொல்லினமையானும்,
திணைவழுவாவது  பொருந்தாது   விடுவது   என்பதாகலானும், இதுவும்
திணைவழூஉ   எனப்படும்.   இவ்வாறு   இடர்ப்படுகின்றது  என்னை?
இதனை   மரபு   வழுவமைதி   என்று   கூறுக   எனின்,  ‘வியங்கோ
ளெண்ணுப்  பெயர்  திணைவிரவு  வரையார்’   என   ஆசிரியர் மேற்
கூறுகின்றமையின் இதற்கும் அதுவே கருத்து என்பது பெறுதும்.

இனிச்  சொல்லொடு   சொல்  முடித்தலே  திணைவழு  வெனினுஞ்
‘சாறும்’  என்னும்  உயர்திணை  முற்றுச்  சொல்லே   எஃகம்  என்னும்
அஃறிணையினையும்  உளப்படுத்தமையின்  வழுவும்  இதன்கண் உண்டு
என உணர்வது.