என் - எனின், மேற் சொல்லப்பட்ட எழுவாய் வேற்றுமை என்பது, ஆறுவகைப்பட்ட பயனிலையும் ஏற்று நிற்பது என்றவாறு. (இ - ள்.) பொருட்டன்மை கருதிவரும் வரவும், ஏவலைக் கொள்ள வரும் வரவும், தனது தொழிலினைச் சொல்ல வரும் வரவும், வினாவுதற் பொருண்மைக்கு ஏற்று வரும் வரவும், தனது பண்பினைக் கொள்ள வரும் வரவும், என்று சொல்லப்பட்டவை யனைத்தும் வரும் பெயர்ச்சொல்லது பயனாகிய நிலைமை, (எ - று.) என்றது, முதல் வேற்றுமையாவது இவ் ஆறு பொருண்மையுந் தோன்ற நிற்பது என்றவாறு. அவ்வப் பொருண்மையை விளக்குவன பின் வருஞ் சொற்கள் என்றவாறு. பெயர்ப் பயனிலை யென்றது பின் வருகின்ற சொற்களேயன்று, அவ்வச் சொல்லின் பொருண்மையினைக் குறித்த பெயர் நிற்கும் நிலைமை வேறுபாடுகளை, (எ - று.) நிலை என்னாது பயனிலை என்றது அப்பெயர்களைக் கேட்பின் இப்பொழுது இப்பொருள் இன்ன நிலைமைத்து என உணரும் உணர்ச்சிக்குப் பயன் பட நிற்கும் நிலைமைய என்றற்கு என்பது. (எ - டு.)பொருண்மைசுட்டல் : ஆ உண்டு என்பது. இதன் பண்பு முதலியவற்றைக் கருதாது பொருட்டன்மையைக் கருதி நிற்றலால் பொருண்மை சுட்டல் எனப்பட்டது. உண்மை என்பது பண்பன்றோ எனின், அன்று. அப்பொருட்டன்மை என்பது போலுங் கருத்து. ஆ இல்லை என்பதும் இதன்கட் பட்டடங்கும். |