என் - எனின், எழுவாய் வேற்றுமை அதிகாரம் உணர்த்தினார் ; இனி அம் முறையானே இரண்டாம் வேற்றுமை உணர்த்துதல் நுதலிற்று. (இ - ள்.) இரண்டாம் எண்ணுமுறைக்கண்ணதாகிய ஐ என்னும் பெயரையுடைய வேற்றுமைச்சொல் யாதானும் ஓரிடத்துவரினும் வினையும் வினைக்குறிப்பும் என்று சொல்லப்படுகின்ற இரண்டும் அடியாக வரும். பொருள்பற்றிச் சொல்லின் காப்பு என்பது முதலாய்ச் சிதைப்பு ஈறாய் ஓதப்பட்ட இவையும், இவை போல்வன பிறவுமாகிய அவ்வவ்வினை வினைக்குறிப்பு என்னாநின்ற முதற்பொருளைப்பற்றி வருகின்ற எல்லாச் சொற்களும் இரண்டாவ தன் கூற்றன என்று சொல்லுவர் புலவர், (எ - று.) (எ - டு.) மரத்தைக் குறைத்தான் என்பது வினை. குழையையுடையன் என்பது வினைக்குறிப்பு. காப்பு - ஊரைக்காக்கும். ஒப்பு - தாயை யொக்கும். ஊர்தி - யானையை ஊரும். இழை - எயிலை யிழைக்கும். ஓப்பு - கிளியை யோப்பும்; இவை வினை புகழ் - ஊரைப் புகழும். பழி - நாட்டைப் பழிக்கும். |