தேல் அவை அஃறிணை இருபாற்கும் உரிய உருபாயின் அவ்வாறு போல, உயர்திணை முப்பாற்கும் உரியவுருபு கூறாரோ எனின், அவ்வாறு வரும் வழக்கின்மையின் கூறாராயினார் என்பது. நமன், நமள், நமர் என்பனவற்றுள் அன், அள், அர் என்பன உயர்திணை உருபன்றோ எனின், பிறவுருபு போலத் தொகுத்தலும் விரித்தலும் இன்மையானும், தற்கிழமையும் பிறிதின்கிழமையும் என்னும் இரண்டிடத்தும் வாராமையானும், மற்றைப் பெயரும் உருபும் ஆகக் கொள்ளாத ஆறாம் வேற்றுமைத் தொகைச்சொற் போல இரு பொருணிலைமைத்தொரு சொல்லென எச்சவியலுள் கூறுகின்றார் என்பது. அஃதேல் உயர் திணைப் பொருளை யுடைமை செப்புமாறு என்னை எனின், அதற்கு 1மேல் வருகின்ற ஓத்தினுள், ‘அது என் வேற்றுமை’ என்புழிக் கூறுவர் என்பது. தன்னினும் என்புழிக் கிழமை ஐந்துவகைப்படும்; அவை ஒன்று பல குழீஇய தற்கிழமையும், வேறுபல குழீஇய தற்கிழமையும், ஒன்றியற் கிழமையும், உறுப்பின் கிழமையும், மெய்திரிந்தாகிய தற்கிழமையும் என. பிறிதின் கிழமைஇது போலப் பகுதிப்படாது என்க. ஒன்று பல குழீஇயது - எட்குப்பை, எண்ணதுகுப்பை என்றவாறு வேறு பலகுழீ இயது - படைக்குழாம். ஒன்றியற் கிழமை - நிலத்தகலம், சாத்தனதியற்கை. உறுப்பின் கிழமை - யானையது கோடு, புலியது உகிர். மெய்திரிந்தாகியது - எட்சாந்து. இயற்கை - சாத்தனதியற்கை. இது நாற்கிழமையுள் ஒன்றியதற்கிழமை. உடைமை - சாத்தனதுடைமை. இது பிறிதின் கிழமை; தற்கிழமையும் படும்போலும். முறைமை - ஆவினது கன்று. இது பிறிதின்கிழமை. கிழமை - சாத்தனது கிழமை. செயற்கை - சாத்தனது செயற்கை ; இவ்விரண்டும் தற்கிழமை ஆகுபெயராயவழிப் பிறிதின் கிழமையுமாம். முதுமை - அவனது முதுமை. இது தற்கிழமை. வினை - சாத்தனது வினை. இதுவும் ஆகுபெராயவழிப் பிறிதின் கிழமையுமாம்.
1 வேற்றுமை மயங்கியல், 11 ஆம் நூற்பா. |