உ-ம் : ஆடை கொணர்ந்தவழி அவ்வாடை வேண்டா தான் மற்றையது கொணா வென்னும், அஃது அச் சுட்டிய ஆடை ஒழித்து அதற்கினமாகிய பிற ஆடை குறித்து நின்றவாறு கண்டு கொள்க. 1 ‘பெரும்பான்மையும் முதனிலையாய் நின்றல்லது அவ்விடைச்சொல் பொருள் விளக்காமையின். ‘மற்றையதென்னுங் கிளவி’ என்றார். சிறுபான்மை மற்றையாடை யெனத் தானேயும் வரும். மற்றையஃது, மற்றையவன் என்னுந் தொடக்கத்தனவும் அவ்விடைச் சொல் முதனிலையாய பெயர். தெய். இதுவுமது. இ-ள் : மற்றையது என்னுஞ் சொல் சுட்டி நின்ற பொருளை ஒழிய அதற்கினமாகிய பொருளைக்குறித்து நிற்கும், எ-று. அது என்பது எவ்வாறு வந்தது எனின், மேல் வினை மாற்று என்றார், இப் பொருள் மாற்றுஎன்ப தனைவிளக்குதற்கு அது என்பதனைக் கூட்டியுரைத்தார், அது என்பது பெயராதலின், ‘ஒருபாற்கிளவி எனைப்பாற் கண்ணும், வருவகை தானே வழக்கென மொழிப’ (பொருளி. 28) என்பதனான் ஐந்து பாற்கண்ணும் கொள்க. அவ்வாறு கொள்ளவே, மற்றை என்பது இடைச் சொல்லாகி நின்று பிறபொருள் உணர்த்திய வாறு கண்டு கொள்க. இனங்குறித்து என்றமையாற் சுட்டப்பட்ட பொருட்கு இனமாகிய பொருளையே குறிக்கும் ஆடை கொணர்ந்த வழி, மற்றையதோ எனிற் கொணர்ந்தது ஒழியப்பிறிதும் ஓர் ஆடையைச் சுட்டியவாறு கண்டு கொள்க. ஒருவினை செய்வார் இருவர் உள்வழி, ஒருவனைக் கண்டவன் மற்றையவனோ என்ற வழி, அதுவும் இனங்குறித்தது. பிறவும் அன்ன
1. “பெரும்பான்மையும்.. என்றார்” : மற்றை என்னும் இடைச்சொல் பகுதியாய் நின்று விகுதியுடன் கூடியே பெயர்ச் சொல்லாகிப் பொருளை விளக்குமாதலின் ஆசிரியர் மற்றை என்று கூறாமல் மற்றையது எனப் பெயர்த்தன்மையில் கூறினார். விகுதியுடன் கூடி வருதலாவது மற்றையன், மற்றையள், மற்றையர், மற்றையது, மற்றையன எனப் பெயர்ப்பட்டு வருதல். |