முன்னரும் வருதல் ஒன்றென முடித்தலாற் கொள்க. இவைதாம் ரகரவீற்றுப் பெயர் அன்மையின் விளியேற்குமிடத்து இகர வீறும் ஐகார வீறுமாய் நின்றே விளியேற்கும் என்று உணர்க. ஒருமைப் பெயர் நின்று ஆரைக்கிளவியை ஏற்றலின், இவை ஒருவரைக் கூறும் பன்மைக்கிளவியின் வேறாயின. வெள். இஃது ஆர் என்னும் இடைச்சொல்லின் முடிபு கூறுகின்றது. இ-ள் : இயற்பெயர் முன்னர் வரும் ஆர் என்னும் இடைச் சொல் பலரறி சொல்லால் முடியும், எ-று. இங்கு இயற்பெயர் என்றது இருதிணைக்கும் அஃறிணையில் இருபாலுக்கும் உரிய பெயரை. ‘பலர்க்குரி யெழுத்தின் வினை’ என்றது உயர்திணைக்குரிய பலர் பால்வினையை. ‘முடியுமே’ என்னும் செய்யு மென்னும் முற்று உயிர்மெய் கெட ‘முடியுமே’ என வந்தது. உ-ம் : பெருஞ்சேந்தனார் வந்தார், முடவனார் வந்தார்,முடத்தாமக் கண்ணியார் வந்தார், தந்தையார் வந்தார் எனவும் : நரியார் வந்தார் எனவும் வரும். நம்பியார் வந்தார், நங்கையர் வந்தார் எனச் சிறுபான்மை உயர்திணைப் பெயர்முன் ஆர் வருதல் ஒன்றென முடித்தல் என்பதனாற் கொள்ளப்படும். சாத்தன், சாத்தி என்னும் ஒருமைப் பெயர் முன் வந்து ஒருமை சிதையாமல் சாத்தனார், சாத்தியார் என நிற்கும் ஆர் என்னும் இடைச் சொல், அப்பெயரோடு ஒற்றுமை யுடைத்தாய்ப் பலரறி சொல்லால் முடிதலின் ஒருவரைக் கூறும் பன்மைக் கிளவியின் வேறாதல் உணர்க. ஆதி. இயற்பெயர்முன் ஆர் சேரின் அப்பெயர் பலர்பால் வினைமுற்றுப் பெறும். ஆதித்தன் - இயற்பெயர். ஆதித்தனார் வந்தார்- பலர் பால். கண்ணனார் தலைமை வகிக்கிறார். சுப், பொருள் : இது, ஆர் என்னும் இடைச்சொல் பெயர் முன் அல்லது வாரா என்பது. |